அப்துல் கலாமின் பேஸ்புக், டிவிட்டர் கணக்குகள் யாருக்குச் சொந்தம்?.. வெடித்தது மோதல்
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளை கையாளுவது தொடர்பாக அவரது உதவியாளர்களுக்கிடையே சிறிய மோதல் வெடித்துள்ளது.
அப்துல் கலாமிடம் நீண்ட காலமாக உதவியாளராக அறிவியல் ஆலோசகராக இருந்து வந்த வி. பொன்ராஜ் மற்றும் அப்துல் கலாமின் முன்னாள் மாணவரான ஸ்ரீஜன் பால் சிங் ஆகியோருக்கு இடையே இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீஜன் பால் சிங், அப்துல் கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களைப் பயன்படுத்தி வருவதற்கும் அப்துல் கலாமின் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்தில் மோதல்
அப்துல் கலாம் மறைந்து ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு மோதல் வெடித்திருப்பது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கலாமின் சோக நினைவுகள் இன்னும் மாறாத நிலையில் இந்த மோதலை அனைவரும் கவலையுடன் கவனித்து வருகின்றனர்.

ஸ்ரீஜன் பால் சிங்குக்கு நோட்டீஸ்
டெல்லியில் உள்ள அப்துல் கலாமின் அலுவலகம், ஸ்ரீஜன்பால் சிங்குக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் அப்துல் கலாமின் பெயரில் நீங்கள் எந்த அறிக்கையையும் தரக் கூடாது. அப்துல் கலாம் பெயரிலோ அல்லது அவரது நினைவாகவோ தொடங்கியுள்ள அனைத்து பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளையும் டீஆக்டிவேட் செய்யுமாறும் உங்களுக்கு அறிவுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென வந்த சிங்
ஸ்ரீஜன் பால் சிங் திடீரென வந்ததும், அப்துல் கலாம் குறித்து அவர் எழுதிய செய்திகள், கட்டுரைகளுக்கு திடீர் புகழ் கிடைத்ததும் கலாமின் நீண்ட கால உதவியாளர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். குறிப்பாக "Last Eight Hours with Kalam" என்ற தலைப்பில் அவர் அப்துல் கலாம் மறைவுக்குப் பின்னர் எழுதிய கட்டுரை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

பொன்ராஜ் அதிருப்தி
இதுகுறித்து அப்துல் காலமின் அறிவியல் ஆலோசகராக அவருடன் நீண்ட காலம், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருந்தவரான வி.பொன்ராஜ் கூறுகையில், ஒரு மாணவராக கலாமுடனான தனது அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் சிங்குக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவருக்கு அதில் முழு உரிமை உள்ளது. அதேசமயம், கலாம் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக அவர் கருத்துக்களைச் சொல்வது தவறு. அதற்கென்று ஒரு அலுவலகம் உள்ளது. அது அதைப் பார்த்துக் கொள்ளும்.

தனிப்பட்ட அனுபவத்தைத்தான் சொன்னேன் - சிங்
இதுகுறித்து ஸ்ரீஜன் பால் சிங் விளக்கம் அளிக்கையில், நான் கலாமுடன் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தைத்தான் சொன்னேன். கலாம் உயிருடன் இருந்தபோது, தனது சமூக வலைதள பக்கங்களை பராமரிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அதில் நான் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேன். அலுவலகம் அதை விரும்பவில்லை என்றால் உடனடியாக நான் டீஆக்டிவேட் செய்யத் தயாராக இருக்கிறேன்.

தடுக்க முடியாது
அதேசமயம், கலாமுடனான எனது அனுபவங்களை மக்களிடம் சொல்வதிலிருந்து அவர்கள் என்னைத் தடை செய்ய முடியாது. கலாம் அவர்கள் எனக்கு குரு, எல்லாமே.

கலாமுடன் எனது தொடர்புகள்
கலாமுடன் இணைந்து நான் இரு நூல்களை எழுதியுள்ளேன். 3வது நூலை எழுதிக் கொண்டிருந்த நிலையில்தான் அவர் மரணமடைந்து விட்டார். கலாம்தான் எனக்கு எல்லாமே. ஒரு தனிப்பட்ட நபராக அவருடனான அனுபவத்தை மட்டுமே நான் சொல்லி வருகிறேன். ஒரு சராசரி இந்தியக் குடிமகனாக அதைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது என்று நான் கருதுகிறேன். அதை யாரும் தடுக்கவும் முடியாது என்றார் சிங்.

5 ஊழியர்களுடன் அலுவலகம்
கலாம் உயிருடன் இருந்பதோ முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற வகையில் ஒரு அலுவலகமும், ஐந்து ஊழியர்களும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர மேலும் பலரும் கலாமுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர். தாங்களாக முன்வந்து இவர்கள் கலாமுடன் இணைந்து செயல்பட்டவர்கள் ஆவர்.

எங்களுக்கு உள்நோக்கம் இல்லை - பொன்ராஜ்
சிங் விவகாரம் குறித்து பொன்ராஜ் விளக்குகையில், ஸ்ரீஜன்பால் சிங்கை தடுப்பதிலோ அல்லது இந்த விவகாரத்தில் எங்களுக்கு வேறு உள்நோக்கமே இல்லவே இல்லை. கலாமின் நல்ல மாணவர் அவர். தனது அனுபவங்களையும், கலாமின் கொள்கைகளையும், அவரது லட்சியங்களையும் அவர் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

20 வருடமாக கலாமுடன் இருந்தேன்
நான் இருபது வருடமாக கலாமுடன் இருந்தேன். இப்போது எனது பணி கலாமின் சிந்தனைகளையும், லட்சியங்களையும் பரப்புவதே. இதில் சில விதிமுறைகளை, ஒழுங்கை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் பொன்ராஜ்.
விரைவில் சுமூக நிலை திரும்பினால் அது கலாமின் புகழுக்கு நல்லது.












Click it and Unblock the Notifications