அப்துல் கலாம் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி
ராமேஸ்வரம் : பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு அப்துல் கலாம் உடலை அவரது உறவினர்களிடம் ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர்.
மக்கள் ஜனாதிபதி, இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் கடந்த 27-ந் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது மரணம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்துல் கலாமின் உடல் நல்லடக்கத்தை அவர் பிறந்து, வளர்ந்த ராமேஸ்வரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் காலை அவரது உடல், டெல்லி எடுத்து வரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தியபின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, டெல்லியில் அவர் வாழ்ந்து வந்த ராஜாஜி மார்க்கில் உள்ள வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதையடுத்து கலாமின் உடல் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது. கலாமின் அண்ணன் முத்து முகமது மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது.
இரவு 10 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி முடிந்து ராமேசுவரம் கிழகாடு பகுதியில் இருந்து ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அப்துல்கலாமின் வீட்டுக்கு அவரது உடலை ராணுவ வாகனத்தில் வீரர்கள் கொண்டுசென்றனர்.
அங்கு காலமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் மற்றும் உறவினர்கள் அப்துல்காலமின் உடலை பெற்றுக்கொண்டனர்.
நாளை காலை கலரிமன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.