அதிர்வேட்டுகள் முழங்க மதுரை புறப்பட்டார் கள்ளழகர் - மே 10ல் வைகையில் இறங்குகிறார்
வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர்கோலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். செவ்வாய்கிழமை எதிர்சேவை நடக்கிறது.
மதுரை: வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதற்காக கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் நேரிக் கம்புடன் பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க அதிர் வேட்டுகள் விண்ணை எட்ட தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் சுந்தரராஜபெருமாள். சித்திரைவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபம் 10ம் தேதி நடக்கிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா, தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்துக்காக அழகர்மலையிலிருந்து கள்ளழகர் திங்கட்கிழமை மாலை புறப்பட்டார்.

மதுரை வரும் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வரவேற்கும் எதிர்சேவை செவ்வாய்கிழமை அதிகாலை மூன்று மாவடியில் நடக்கிறது. மலையில் இருந்து மதுரைக்கு வரும் கள்ளழகரை, அழகர் வேடமிட்ட பக்தர்களும், பொதுமக்களும் பெருமாளை வரவேற்பர்.
சர்க்கரைக் கிண்ணத்தில் நெய்தீபம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை முட்டும். வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பினையும், காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் பெருமாள் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் சற்று ஓய்வெடுக்கிறார்.
செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்கிறார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து பக்தகோடிகளுக்கு கள்ளழகராக காட்சியளிக்கிறார்.
புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.












Click it and Unblock the Notifications