கமல் கட்சியின் கொள்கை.. உங்களுக்குப் புரிஞ்சுதா, இல்லையா?
Recommended Video

ஜல்லிகட்டு போராட்டத்தை சர்வதேச தமிழர்கன் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் கமல்ஹாசன். தமிழர்களை அநாகரிக வார்த்தைகளால் டுவிட்டரில் சுப்பிரமணிய சுவாமி வசைபாடிய போது தமிழக அரசியல்வாதிகள் மெளனம் காத்தனர்.
அதற்கு எதிர்வினை ஆற்றி சுவாமியை உலுக்கி எடுத்த கமல்ஹாசன் டுவிட் சர்வதேச தமிழர்கள் கவனத்தை கவர்ந்ததன் விளைவு உலகம் முழுமையும் ஜல்லிகட்டு போராட்டத்துக்கு தன் எழுச்சியாக போராட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக கமலஹாசன் டுவிட் தமிழக அரசியல்வாதிகளின் தூக்கத்தைக் கெடுத்தது.

அனைத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும் தன் நிலைபாட்டை தயக்கமின்றி டுவிட்டரில் பதிவு செய்து வந்தார் கமல்.
அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு உளர ஆரம்பித்ததன் விளைவு 'ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கின கதையாக' என்ற கிராமத்து பழமொழி போல் சினிமாவுக்குள் இருந்த கமலை தமிழக அரசியல் அரங்கில் பெரியாளாக்கிய பெருமை அதிமுவுக்கே உரியது.
ஒரு கட்டத்தில் இது அதிமுக பாஜாக தலைவர்களால் லாவணி சண்டையாக்கப்பட்டு 'வந்து பார்' என்றார்கள்... 'அப்படியா வந்துட்டேன்' என்று மதுரையில் அரசியல் கட்சி பெயரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் கமல்.
தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அரசியல் கட்சி தொடங்குவதை இங்குள்ள அரசியல் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

கமல் கட்சியின் கொள்கை என்ன, மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பது கமலுக்கே புலப்படாத நிலையில் நேற்று காலை முதல் அவரது அரசியல் பிரவேசம் குறித்து மாநில கட்சி முதல் தேசிய கட்சி வரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியதை தமிழ் தொலைக்காட்சிகள் உயரத் தூக்கி பிடித்தன.
அதே நேரம் அப்துல் கலாம் வீட்டில் கமல் கால் பதித்த நொடியில் இருந்து மதுரை ஒத்தக்கடை பொதுக் கூட்டம் வரையிலான நிகழ்வுகளை நேரலையாக்கி வியாபாரமும் செய்தார்கள்.
தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களை தன்னைச் சுற்றி வைத்து இருக்கும் கமல் அவர்கள் வடிவமைத்து கொடுத்த பயணத் திட்டத்தில் காலை முதல் ஒத்தக்கடை மேடையேறும் வரை சரியாகவே பயணப்பட்டார்.

தலைமை உரையை எந்த வித குறிப்புகள் இன்றி தொடங்கிய போது மிகச் சிறந்த அரசியல்வாதியாக பக்குவப்பட்ட பாணியில் பேச தொடங்கினார் கமல். தொலைக்காட்சி நேரலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பார்த்து இருப்பார்கள்.
பொதுவாக கமல் பேசும் மொழி நடை பிறருக்கு புரியாது என்பது சினிமா பத்திரிகையாளர்கள் அடிக்கும் கமெண்ட்.
வழக்கமான தனது பேச்சு நடையை பாமர மொழிக்கு மாற்றி தரமான கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு பற்றி சரளமாக பேசிய கமல் அதேசமயம், கழுவுகிற மீனில் நழுவிய மீனாக தனது கட்சியின் அரசியல் நிலைபாட்டை, கொள்கை என்ன என்பதை இறுதி வரை தெளிவாக அறிவிக்கவில்லை.
எல்லா நல்ல முதல்வர்களும் செய்யக் கூடியதை நாமும் செய்வோம் என்றவர் அந்த நல்ல முதல்வர் சந்திரபாபு நாயுடுவா? பினராயி விஜயனா? தன் பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலா என்பதை அடையாளப்படுத்தவில்லை.
இடதும் இல்லை வலதும் இல்லை என்றவர் தான் யார் என்பதை அறிவிப்பதிலும் குழப்பினார். இடதுசாரிகளுக்கு மதவாத கட்சி எதிரி, காங்கிரசுக்கு பாஜக எதிரி அதிமுகவுக்கு திமுக எதிரி இவர்கள் ஆண்ட தமிழகம் பாழ்பட்டு சீரழிந்து இருப்பதை சீர்படுத்த போகிறேன் என கர்ஜிக்கும் கமல் இக்கட்சிகளில் எதை எதிர்த்து தனது அரசியல் என்பதைச் சொல்லவில்லை.
கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் கமல். அவரிடமிருந்து தமிழை கற்றுக் கொண்டதாக கூறுவது வழக்கம். கேள்வியிலேயே துணை கேள்வியை உருவாக்கி பதில் கூறுவது கருணாநிதியின் பாணி.
இதனை நேற்று பொதுக் கூட்ட மேடையில் பாரதி கிருஷ்ணகுமார் மக்கள் கேட்ட கேள்வி என படித்த அனைத்துக்கும் அதில் இருந்தே கேள்வியை உருவாக்கி பதிலாக கூறினார்.
தமிழக அரசியல்வாதிகளை பெயர் குறிப்பிடாமல், கடுமையாக விமர்சிக்காமல் அதே நேரம் நீங்கள் ஒழுங்காக மக்களுக்கான தேவைகளை செய்து இருந்தால் நான் வந்திருக்க மாட்டேன் என்று வஞ்சப்புகழ்ச்சி வாசித்த கமல் இப்போதும் கூட எல்லாம் செய்து விட்டீர்கள் என்றால் நாங்கள் போய் விடுவோம் என்று கூறி அதிரவும் வைத்தார்.
அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் பொருளாதார கொள்கை என்ன என்பதை அறிய தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications