ராமநாதபுரம் டூ புனித கோட்டை.. வழி பரமக்குடி.. கமல்ஜி ஆர் யூ ரெடி!
சென்னை: ராமநாதபுரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் காலியாக உள்ள பரமக்குடியில் போட்டியிட்டு புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தகுதிநீக்கம் வழக்கில் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த எவ்வித தடையும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இதில் கடும் போட்டி நிலவும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஊர் ஊராக..
இதில் கமல்ஹாசன் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது அவரது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு. கட்சியை தொடங்குவதற்கு முன்னர் கூட தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தவர். இன்று நாமக்கல், சேலம் என ஊர் ஊராக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
நாலாப்பக்கமும்
20 தொகுதிகளின் இடைத்தேர்தலில் நம் கட்சியும் போட்டியிட்டால் மக்களின் நாடித் துடிப்பை அறிந்து கொள்ள மிகவும் நல்ல வாய்ப்பு என்று நிர்வாகிகள் கருதுகின்றனர். அதோடு இந்த 20 தொகுதிகளும் தமிழகத்தில் 4 திசைகளையும் உள்ளடக்கியுள்ளது.
20 தொகுதிகள்
ஆர் கே நகர் தொகுதியில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். சுயேச்சை வேட்பாளரான தினகரனை பெரும் வெற்றி பெற வைத்தனர். எனவே போட்டியிட்டால் பொதுத் தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்றில்லாமல் இந்த 20 தொகுதிகளையும் ஒரு மினி பொதுத் தேர்தலாக கருதி போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை பெற முடியும். கமலுக்கு மக்கள் செல்வாக்கு என்ன என்பதை ஆழம் பார்த்துவிட்டு அடுத்தடுத்த காரியங்களில் இறங்கலாம்.
இப்படி செய்வோம்
சுற்றுப்பயணங்களின் போதும் மக்கள் நினைத்தால் எங்கள் கட்சி வெற்றி பெற்று குறிப்பிட்ட தொகுதிக்கு தேவையானதை செய்யும் என்று கமல் கூறி வருகிறார். அவ்வாறு வெற்றியோ தோல்வியோ போட்டியிடுவதுதான் சிறந்தது என்பதற்கேற்ப அவர் போட்டியிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
ஜார்ஜ் கோட்டை
அப்துல் கலாம் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல வேண்டும் என்றால் பரமக்குடி வழியாக செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எனவே கமல்ஹாசனும் கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் போட்டியிட்டு இளம் தலைவர்களுக்கு முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.