ஆன்மிக அரசியலில் இணைய வழி இருக்கிறதா... கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?
அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினி சொன்னதையே வழிமொழிவதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அரசியலில் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினி சொன்ன கருத்தையே வழிமொழிவதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் சக்தியை மக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகக் கூறிய நடிகர் கமல்ஹாசன், மறைந்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இந்த அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக நேற்று கூறியுள்ளார். அப்துல் கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரைப் போல பல கனவுகளைக் கொண்டவன் என்பதால் கலாம் வீட்டில் இருந்து தனது பயணத்தை தொடங்குவதாக கமல் கூறியுள்ளார்.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல் திடீரென அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ரஜினி கூறியிருந்தார்.
மக்கள் சக்தியை நினைவுபடத்தப்போகிறேன்
இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்களையே மக்கள் முன்பு நிறுத்தப் போகிறேன். அவர்களின் பலம் தான் நாட்டையே புரட்டிப் போடும், அது அவர்களுக்குத் தெரியும், அதை நான் நியாபகப்படுத்தப் போகிறேன்.
ரஜினி கருத்தை வழிமொழிகிறேன்
ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் என்பது எல்லாவற்றிற்குமே ஒரு நல்ல மருந்து. அதுவே என் பதிலாகவும் இருக்கட்டும், இணைந்து செயல்படுவது குறித்து ரஜினி சொன்ன கருத்தையே நானும் வழிமொழிகிறேன் என்றார்.
எந்த தியாகமும் செய்யலாம்
நான் பகுத்தறிபவன் அவ்வளவுதான், அதில் உங்கள் கடவுளை கண்டறிவதும் ஒரு முக்கியமான அறிவுதான். அதை அறிந்து அன்பாக எல்லோரும் ஒற்றுமையாக இருக்க என்னென்ன வழி இருக்கிறதோ அதை செய்யலாம். அதற்காக எந்த தியாகமும் செய்யலாம்.
என் நம்பிக்கை எனக்கு
எதிர்காலத்தில் ஆன்மிக அரசியலில் இணைவதற்கான வழி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல், அது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார். என் நம்பிக்கை எனக்கு அவருடைய நம்பிக்கை அவருக்கு என்றும் கமல் பதிலளித்துள்ளார்.