சங்கராச்சாரியார்கள் வெளியே செல்லக்கூடாது.. போலீஸ் உத்தரவால் மடத்திற்குள் முடங்கிய விஜயேந்திரர்!
விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சி சங்கரமடத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

காஞ்சிபுரம்: விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சி சங்கரமடத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களால் விஜயேந்திரர் மடத்திற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி. அப்போது இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்தார்.
இதனால் கொந்தளித்த தமிழ் அமைப்புகள் விஜயேந்திரருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காஞ்சி சங்கரமடத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடப் போவதாகவும் தகவல் வெளியானது.

போலீசார் குவிப்பு
இதனை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்துக்கு நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இரண்டாவது நாளாக சங்கர மடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துக்கு தடை
இரண்டு ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மடம் அமைந்துள்ள சாலை வீதியில் போக்குவரத்துக்கு தடைவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு
இதேபோல் மடத்திற்கு அருகில் உள்ள மேற்கு வாசல் பகுதியும் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை.

வெளியே செல்லக்கூடாது
விஜயேந்திரர் உட்பட காஞ்சி சங்கரமடத்தை சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் யாரும் தங்களை கேட்காமல் வெளியே செல்லக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர். இதேபோல் வெளி நபர்கள் மடத்திற்குள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

முடங்கி கிடக்கும் விஜயேந்திரர்
இதன் காரணமாக ஏற்கனவே பங்கேற்பதாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் விஜயேந்திரர் மடத்திற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார். காஞ்சி விஜயேந்திரருக்கு எதிராக போராட்டம் இன்று அனுமதி மறுத்துள்ள போலீசார் நாளைக்கு நடத்திக்கொள்ளுமாறு அனுமதி வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications