வெள்ளம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் இயங்க முடியாத அளவுக்கு மழை வெள்ள பாதிப்பு இருந்தது.

சென்னை நகரில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்பட்ட நீர் அடையாறு ஆற்றில் பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் கூவம் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நகரின் பல பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள் கடந்த 2 நாட்களாக நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் இம்மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.
இதேபோல் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளும் நிரம்பி ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications