நடிகையாக பார்க்காதீர்கள், அரசியல்வாதியாக பாருங்கள்... குஷ்புவுக்கு கனிமொழி சப்போர்ட்!
தஞ்சாவூர்: யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது. அது விரும்பத்தகாத ஒன்று. குஷ்புவை நடிகையாக மட்டும் பார்க்கக் கூடாது. அவரை அரசியல்வாதியாகவும் பார்க்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் பிரசாரம் செய்ய வந்த கனிமொழி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரி இறுதிதீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட திமுக எந்த அளவுக்கு உழைத்தது என்று எல்லோருக்கும் தெரியும். காவிரி பிரச்சினையில் தொடர்ந்து போராடினோம். மற்ற மாநில முதல்வர்களுடன் தலைவர் கருணாநிதி பேசி விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் தண்ணீரை பெற்று தந்து இருக்கிறார். ஆனால் அதிமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். அதிமுக ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதற்காக மக்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். திமுக தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாக ஆட்சி அமைக்கும்.
கிரானைட் பிரச்சினை வெளிவராமல் இருக்க அதிமுக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தன. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு தான் விசாரணை நடத்தப்பட்டது.
எந்த தவறையும் மறைக்க திமுக முயற்சி செய்தது கிடையாது. யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. கட்சிக்காக எப்படி உழைத்து இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்ந்துவிடவில்லை. அவர்கள் எல்லோருடனும் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியது இல்லை.
பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இதில் தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்தி சரி செய்தால் மட்டுமே ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும்.
பல அரசியல் தலைவர்கள் மற்ற தலைவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். அது விரும்பத்தகாத ஒன்று. தி.மு.க.வில் யாரும் அப்படி விமர்சனம் செய்வது கிடையாது. குஷ்புவை நடிகையாக மட்டும் பார்க்கக்கூடாது. அவரை அரசியல்வாதியாக பார்க்க வேண்டும் என்றார் கனிமொழி.