தோல்வி பயம்... விஜயகாந்த்தின் தொகுதி மாற்றம் குறித்து கனிமொழி விமர்சனம்
சேலம்: தோல்வி பயம் காரணமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார்.
அதில், ‘தோல்வி பயத்தின் காரணமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட பயந்து கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு போகிறார்' என்றார் அவர்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை எப்படித் தயாரிப்பது என்பதே தெரியாமல் தடுமாற்றத்தில் உள்ளதாக தெரிவித்த கனிமொழி, ‘திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களை கேட்டு அவர்களின் தேவையை மனதில் கொண்டு தான் தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளார்' என்றார்.
முன்னதாக பாமகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்து விட்டதாக அக்கட்சித் தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.