டிஸ்சார்ஜ் ஆனார் கனிமொழி
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கனிமொழிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாக கூறி அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
கனிமொழிக்கு என்னவாயிற்று என்று திமுகவினரும் பதட்டமடைந்தனர். இந்த நிலையில் காவேரி மருத்துவமனை ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதில், கனிமொழி எம்.பி., ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வாகக் காணப்பட்டார்.

கனிமொழிக்கு ஏற்பட்டுள்ள மயக்கம் மற்றும் உடல் சோர்வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குளுகோஸ் செலுத்தப்பட்டது. சில நாட்கள் முழுமையான ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக நலமடைந்து விரைவில் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு வேறு உடல் நல பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய டாக்டர்கள் நேற்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து கனிமொழி நேற்று மாலையில் தனது வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications