தொடரும் விவசாயிகள் தற்கொலை...ஜன.5-ல் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை- கனிமொழி
கனிமொழி தம்முடைய பிறந்த நாளை ஜன.5-ல் கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளார். விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாவால் தாம் பிறந்த நாளை கொண்டாடவில்லை என்கிறார் கனிமொழி
சென்னை: விவசாயிகளின் தற்கொலை தொடர் கதையாகி வருவதால் அவர்களது துயரை பகிர்ந்து கொள்ளும் வகையில் நாளை மறுநாள் தம்முடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வடகிழக்கு பருவமழையில் 62 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு, தமிழகத்தை உடனடியாக கடுமையான வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவிக்க விதிகளில் இடமுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலும், ஊடக செய்திகளின் அடிப்படையிலும், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டதாக அறிகிறேன்.

நாகையில் 33 விவசாயிகள்
நேற்று காலை கூட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இம்மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 33ஐ தொட்டுள்ளது.

இரட்டை இடி...
விவசாயிகளின் தலையில் இரட்டை இடி இறங்கியுள்ளது. ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புறம், விதைக்கும் காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மறுபுறம். பல விவசாயிகள், கடன் பெற முடியாமலும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வாங்க முடியாமலும், கூலிக்கு ஆட்களை நியமிக்க முடியாமலும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை
அடிப்படை பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை. இவை ஒரு புறம் என்றால், கடுமையான வறட்சி, மீதமிருந்து பயிர்களையும் அழித்து விட்டது. இந்த துயரமான சூழலில் விவசாயிகளின் துயரைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்... ஜனவரி 5-ம் தேதி எனது பிறந்தநாளினைக் கொண்டாடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்.

சுவரொட்டி கூடாது
எனவே என்னை வாழ்த்தி சுவரொட்டிகளோ விளம்பரங்களோ வேண்டாம் என்று கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன். சில இடங்களில் என்னை வாழ்த்தும் சுவரொட்டிகளைப் பார்க்கிறேன். அவற்றைத் தவிர்க்குமாறு மீண்டும் வேண்டுகிறேன்.
இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications