வைகோ தாயார் உடலுக்கு கனிமொழி எம்.பி., நேரில் அஞ்சலி!- கருணாநிதி ஆறுதல்
நெல்லை: மறைந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடலுக்கு கனிமொழி எம்.பி. நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி, அவரது மனைவி ராசாத்தி அம்மாள் ஆகியோர் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உள்ளூர் பிரமுகர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும், கலிங்கப்பட்டிக்கு வந்து மறைந்த மாரியம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சீமான் அஞ்சலி
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், வைகோவின் தாயார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வைகோவிற்கு ஆறுதல் செலுத்தினார்.

கனிமொழி அஞ்சலி
தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு, வைகோ மற்றும் மாரியம்மாளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, கனிமொழி, சென்னையில் இருந்த தனது தாயாருக்கு போன் செய்து வைகோவிடம் கொடுத்தார். அப்போது ராசாத்தி அம்மாளும் வைகோவுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், வைகோவுடன் போனில் பேசியதாகவும், வைகோவுக்கு, கருணாநிதி ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிவரை போராடியவர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய பெண்களுக்கு முன்னுதாரத்தோடு வாழ்ந்தவர். தன் இறுதி மூச்சுவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.கட்சி பாகுபாடின்றி பாசத்தையும், தாயுள்ளத்தோடு பரிவையும் காட்டியவர் மாரியம்மாள் அம்மையார் என்றார்.

நக்கீரன் கோபால்
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கலிங்கப்பட்டிக்கு வந்து மாரியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இன்று நல்லடக்கம்
இந்நிலையில், மறைந்த மாரியம்மாள் உடல் இன்று காலை 11 மணிக்கு கலிங்கப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதில், தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications