மெரினாவில் காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏன் காட்டலை.. கனிமொழி கடும் தாக்கு
Recommended Video

சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையைக் காட்டவில்லை. வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
மெரினா விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய அவப் பெயரை சம்பாதித்து விட்டது. இந்தியாவே போற்றிய ஒரு தலைவருக்கு நல்லடக்கம் தர இடம் தராமல் மறுத்து கடைசியில் கோர்ட் தலையிட்டு இடம் தந்து தமிழக அரசுக்குப் பெரும் அடியைக் கொடுத்து விட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கோட்டை விட்டு சிக்கலை சந்தித்துள்ளது. இதுகுறித்து திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி டிவிட்டரில் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் கருத்து:
|
வேதாந்தா நிறுவனம்
வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.
|
போதிய ஆலோசனைகள் இல்லை
வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
|
அதை விட இதில்தான் ஆர்வம் அதிகம்
ஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.
|
அதில் அக்கறை காட்டியிருக்கலாமே
கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் கனிமொழி.












Click it and Unblock the Notifications