சவுதியில் முதலாளியால் கை வெட்டப்பட்ட தமிழகப் பெண்... மீட்கக் கோரி சுஷ்மாவுக்கு கனிமொழி கடிதம்
சென்னை: சவுதியில் முதலாளியால் வலது கை வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேறி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் (55). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலை செய்யும் பணிக்காகச் சென்றார்.
இந்நிலையில் வெளிநாட்டு வேலையாட்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறதா என்று அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது கஸ்தூரி தனது முதலாளி தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக அவர்களிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த முதலாளி கஸ்தூரியின் வலது கையை கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகப்பெண் கஸ்தூரியை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தன் முதலாளியால் சித்ரவதை செய்யப்பட்டு கொடிய முறையில் வலது கை வெட்டப்பட்ட நிலையில் கஸ்தூரி, ரியாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.
கஸ்தூரியை அவசரமாக தமிழ்நாட்டுக்கு கொண்டுவர உதவுமாறு என்னிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். கை வெட்டப்பட்ட கஸ்தூரிக்கு அங்கே முறையான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்றும், அவரது நிலைமை விரைவாக மோசமடைந்துவருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே நீங்கள் (சுஷ்மா சுவராஜ்) உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தி, எவ்வளவு விரைவாக கஸ்தூரியை இந்தியாவுக்கு அழைத்து வரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அழைத்து வர நடவடிக்கை எடுத்திடவேண்டும். இந்த கோரிக்கையை கஸ்தூரியின் குடும்பத்தினரின் சார்பாக உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.