கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு திருவிதாங்கூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கக் கோரிக்கை
கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டயம் வழியாக மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது.
இது குறித்து சங்கத் தலைவர் ஸ்ரீராம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கட்டுமான தொழிலுக்காகவும் மீன்பிடி தொழிலுக்காகவும் மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் தினமும் நூற்றுக்கானக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு வாரவிடுமுறைக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று வர குறிப்பாக வடகேரளா பகுதிகளுக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி தற்போது இல்லை.

குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தென்பகுதிகளான நேமம், நெய்யாற்றங்கரை, பாறசாலை பகுதியிலிருந்து கேரளா மாநிலத்தின் மலபார் பகுதிகளான சொர்ணூர், கோழிக்கோடு, மாகி, தலச்சேரி, கண்ணணுர், காசரகோடு மற்றும் மங்களூருக்கு நேரடியாக செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.
இதேபோல் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வயனாடு, மங்களூர், கூர்க்கு போன்ற பகுதிகளுக்கு நேரடி இரவுநேர ரயில் வசதி இல்லாமல் மிகவும் அவதிபடுகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலை தரிசித்துவிட்டு மேற்கு கடற்கரை மார்க்கம் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோவில், உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித இடங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகள் தற்போது பேருந்துகளில் திருவனந்தபுரம் சென்றுவிட்டு அங்கிருந்து புறப்படும் இந்த மூன்று ரயில்களிலும் வடகேரளா மற்றும் மங்களூர்க்கு பயணிக்கின்றனர். கன்னியாகுமரியிலிலுருந்து நேரடியாக மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி செய்து தர வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை ஆகும். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றபடாமல் உள்ளது.
பண்டிகை விடுமுறை காலங்களில் ரயில்வேத்துறை நாகர்கோவிலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில்களை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அறிவித்து இயக்குகிறது. கடந்த மாதம் கூட ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் குமரி மாவட்ட பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மங்களூர் - கொச்சுவேளி இடையே இயங்கி கொண்டிருந்த எரநாடு எக்ஸ்பிரஸ் ரயிலால் திருவனந்தபுரம் பயணிகளுக்கு எத்தகையப் பயனும் இல்லாமல் இருந்தது. இதை திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு வந்து செல்ல வைப்பதற்காகவே, ஜனவரி-2010 முதல் அதனை நாகர்கோவில் வரை நீட்டிக்க செய்தனர். அந்த ரயில் தினமும் நள்ளிரவில் நாகர்கோயிலுக்கு வந்துவிட்டு, நள்ளிரவிலேயே கிளம்பிச் செல்லுகிறது. எனவே இந்த ரயிலால் குமரி மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
ஆகவே கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசரகோடு வழியாக மங்களூருக்கு தினசரி ரயில் இயக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது.
ரயில்வேத்துறை வரலாற்று நினைவுகளை சிறப்பிக்கும் விதமாகவும், இளம் தலைமுறையினர் அதன் முக்கிய பெயர்களை நினைவுபடுத்தும் விதமாகவும் இந்திய ரயில்வேத்துறை பல்வேறு ரயில்களுக்கு வரலாற்று பெயர்களை சூட்டி இயக்கி வருகிறது. பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நினைவு கூறும் விதமாக கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி ரயில் இயக்கி அந்த ரயிலுக்கு திருவிதாங்கூர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட்டு இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது












Click it and Unblock the Notifications