21 ஆண்டுகளாக நடமாட முடியாத இளைஞரை மணந்த பெண்: காதலுக்கு அர்த்தம் சொன்ன சிவகுலதேவி…
கன்னியாகுமாரி: காதலில் விழுந்தவர்கள் பெற்றோர் எதிர்ப்பினால் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் 21 ஆண்டுகளாக எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் இளைஞரை, காதலித்து திருமணம் செய்துள்ளார் நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர். இந்த திருமணத்தைப் பற்றித்தான் இன்றைக்க ஊடகங்களே பேசிக்கொண்டிருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயகுமார். இரட்டையர்களான இவர்கள் சிறுவயதில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கீழே விழுந்து நரம்பு பிரச்னை ஏற்பட்டு, இருவரும் நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய சோகம் நிகழ்ந்து விட்டது. 25 வயதாகும் இருவரும் கடந்த 21 ஆண்டுகளாக படுக்கையிலேயே உள்ளனர்.

இந்த இரண்டு சகோதரர்களில் ஒருவரான விஜயகுமாருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோலவே படுக்கையில் திருமணம் நடந்தது. அப்போது, திருமண விழாவில் கலந்து கொண்ட நெல்லை மாவட்டம் பருத்திக்காடு கிராமத்தை சேர்ந்த சிவகுலதேவி, ஜெயக்குமாரிடம் காதல் வயப்பட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தங்களின் பெற்றோர் ஆசியுடன் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
புது மாப்பிள்ளை ஜெயக்குமார் பட்டு வேட்டி, பட்டுச்சட்டை அணிந்து படுக்கையில் படுத்தபடி, சிவகுலதேவிக்கு தாலி கட்டினார்.
இந்த அபூர்வ திருமண ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications