மீனவர்களை கதிகலக்கிய கடல் சீற்றம் குறைகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் சீற்றம் குறைந்து காணப்படுகிறது.
கன்னியாகுமரி: மீனவர்களை கடந்த இரு தினங்களாக கதிகலங்க வைத்த கன்னியாகுமரி கடல் சீற்றம் தற்போது சற்று தணிந்து காணப்படுவதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வீசிய பேரலையில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அத்துடன் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கடல் தொடர்ந்து பெரும் சீற்றத்துடன் காணப்பட்டு மீனவர்களை அச்சுறுத்தி வந்தது.

கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற கடல் பகுதிகளில் 10 முதல் 15 அடி உயர அலைகள் எழும்பி பீதியை கிளப்பி சென்றன. பல வீடுகளில் கடல் நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை வேறு பாதித்தது. இதுபோதாதென்று, தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகளை கடல் அலை அடித்துச்சென்றுவிட்டது.
இப்படி அனைத்து வகையிலும் குமரிகடல் சீற்றம், கடந்த இருதினங்களாக மாவட்ட மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீனவ மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
எனினும் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடலின் சூழ்நிலையை பார்த்த பின்னரே மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications