மதுரையில் கரகாட்டம், ஒயிலாட்டம்... களைகட்டிய முதல்வர் விழா
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், சட்ட ரீதியாக தொடர்ந்து போராடி தமிழக உரிமையை நிலைநாட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை நடத்திய நன்றி பாராட்டும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
மதுரை பாண்டிகோயில் அருகே, வைகைப் பாசன விவசாயிகள் நடத்திய இந்த விழாவில் பங்கேற்க, தென் மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகளும், அதிமுகவினரும், பொதுமக்களும் விரகனூர் சுற்றுச்சாலைப் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே சென்றனர்.
சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவுக்கு பல பெண்கள் கைக் குழந்தைகளுடன் வந்திருந்தனர். வழிநெடுகிலும் வாகன நிறுத்துமிடங்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.
விழா நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை மாதிரி தத்ரூபமாக அமைந்திருந்ததை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் படத்தின் முன், தண்ணீர் விழுவது போன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே ஏராளமானோக் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
விழாவில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் ஜெயலலிதா, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா மேடைப் பகுதியில் வந்திறங்கினார். விழா நடந்த இடத்தின் மேலே ஹெலிகாப்டர் வட்டமடித்தபோது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் கையசைத்தும், இரட்டை விரலைக் காட்டியும் கரகோஷம் எழுப்பினர்.
மாலை 4.42 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கு ஏராளமான பெண்கள் முளைப்பாரியுடன் ஜெயலலிதாவை வரவேற்றனர். விழாப் பந்தலில் இருந்த கூட்டத்தைவிட, வெளியில் நின்ற கூட்டமே அதிகம்.
அதிமுக தொண்டர்கள் பலர், உடலில் இரட்டை இலையைக் குத்தியும், தலையில் ஜெயலலிதா உருவப்படத்தை சுமந்தும் வந்திருந்தனர். விழா நடந்த இடமே மாநாடு போல காணப்பட்டது.

உற்சாக வரவேற்பு
ஹெலிகாப்டர் தளத்திலிருந்து விழா மேடைக்கு முதல்வர் வரும் வழியெங்கும் முளைப்பாரிகள் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்கின. பெண் கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்தனர். பாரம்பரிய இசையான கொம்பு முழங்கப்பட்டது.

ஒயிலாட்டம், கரகாட்டம்
விழா மேடை செல்லும் வழியில், செங்கோட்டை போன்ற வரவேற்பு வளைவும், மலர்களாலான அலங்கார வளைவும் அமைக்கப்பட்டிருந்தன.

வரவேற்ற மழை
மாலை 4.52 மணிக்கு விழா தொடங்கியது. விழாவை, வெட்ட வெளியில் மின்னணுத் திரையில் ஒளிபரப்பினர். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் வானம் தூறியது. ஆனாலும், பொதுமக்கள் கலையாமல் நின்றனர். விழா முடியும் வரை மழைத் தூறல் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு விழா முடிந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை சென்றார்.

ஸ்தம்பித்த மதுரை
கூட்டம் நிறைவடைந்து ஏராளமானோர் விரகனூர் சுற்றுச்சாலை பகுதிக்கு வந்து சென்றதாலும், முதல்வர் ஜெயலலிதா சாலை வழியாக விமான நிலையம் சென்றதாலும், சுற்றுச்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மிகுந்த சிரமத்துக்கிடையே போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications