ஸ்டாலினை விமர்சித்த கராத்தே தியாகராஜன்.. கோபத்தில் திமுகவினர் முற்றுகை.. காங். கூட்டத்தில் பரபரப்பு
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், பேச்சு, திமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் மூத்த நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை, ஸ்டாலின் யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக கவலை தெரிவித்தார் கராத்தே தியாகராஜன்.
ஆர்ப்பாட்டத்தில், கராத்தே தியாகரஜன் பேசுகையில் கூறியதாவது:
காங்கிரஸ் ஆதரவு
அகில இந்திய கட்சியை சேர்ந்தவர்கள் நாம். நமது ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியை அமைக்க முடியாது. ஸ்டாலின் நடத்தும் போராட்டங்களில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால், இந்த போராட்டத்திற்கு, குறைந்தபட்சம், ஒரு திமுக மாவட்ட செயலாளரை அல்லது இந்த பகுதி திமுக எம்எல்ஏவை, இந்த கூட்டத்திற்கு அண்ணன் ஸ்டாலின் அனுப்பியிருக்கலாம்.
அனைத்து கட்சி கூட்டம்
சத்யமூர்த்தி பவனில் முதல் முறையாக, அனைத்து கட்சி கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. அதில் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் நடக்கவில்லை.
திமுக தொண்டர்கள் முற்றுகை
காங்கிரஸ் கட்சி அகில இந்திய கட்சி, மோடிக்கு சிம்ம சொப்பனமாக உள்ள ராகுல் காந்தி வேண்டுகோளை ஏற்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கராத்தே தியாகராஜன் பேசுகையில், "தளபதி வாழ்க" என திமுக தொண்டர்கள் கோஷமிட்டனர். கொடிகளை தூக்கிக்கொண்டு முன்னால் வந்து முற்றுகையிட்டனர்.
பரபரப்பு
விஷயம் விபரீதமாவதை உணர்ந்த சக காங்கிரஸ் தலைவர்கள் கராத்தே தியாகராஜனை மேலும் இதுதொடர்பாக பேச வேண்டாம் என கேட்டு அவரை அமைதிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் திமுக உறவு வலுவாக இல்லையோ என்ற சந்தேகங்களை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.