கால் முறிந்த மூதாட்டி... பெங்களூரு ஆம்புலன்ஸ் தமிழகம் வர மறுப்பு... பல கார் மாறி வீடு சேர்ந்த அவலம்
தருமபுரி: கால் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டியை தமிழகத்திற்கு கொண்டு வர கர்நாடக ஆம்புலன்ஸ்கள் மறுத்துவிட்டதால் தமிழக எல்லை வரை ஒரு வாடகை காரிலும், பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த காரிலும் மாறி மாறி பயணம் செய்து கடும் சிரமத்திற்கு இடையே வீடு சென்று சேர்ந்துள்ளார் 78 வயதான மூதாட்டி.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தம். 78 வயதான இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தர்மபுரியில் இருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தொடர் சிகிச்சை முடிந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து தமிழகத்திற்கு வந்து விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமிழகத்திற்கு 78 வயது மூதாட்டியை கொண்டு வந்து சேர்க்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அங்குள்ள பல்வேறு ஆம்புலன்ஸ் சர்வீசிடம் கேட்ட போதும் பலன் ஏதும் இல்லை.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து வாடகை கார் மூலம் மூதாட்டி சொந்த ஊருக்கு புறப்பட்டார். கர்நாடக பதிவெண் கொண்ட கார்கள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் மூதாட்டி எல்லையிலேயே இறங்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. மீண்டும் தமிழக எல்லையில் இருந்து தமிழக கார் ஒன்றை புக் செய்து அங்கிருந்து சொந்த ஊருக்கு மூதாட்டி சென்று சேர்ந்துள்ளார்.
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூதாட்டி இப்படி கார் விட்டு கார் ஏறி இறங்கி அலைகழிக்கப்பட்டு பெரும் அவதிக்கு உள்ளானார்.












Click it and Unblock the Notifications