”தாளவாடி கர்நாடகாவுக்கே சொந்தம்” – புது பூதத்தைக் கிளப்பும் வாட்டாள் நாகராஜ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடியை கர்நாடகாவுடன் இணக்க வேண்டும் என்று தமிழக எல்லையில் கன்னட சலுவளிக் கட்சியின் மாநிலத் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார்.
அககட்சியின் மாநிலத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கர்நாடக - தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடிக்கு புதன்கிழமை வந்தனர்.
அவர்கள் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, " தமிழகத்தில் கன்னட மொழி பேசுவோர் 15 லட்சம் பேர் உள்ளனர். கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகரை ஒட்டியுள்ள தமிழக எல்லையிலும், தாளவாடியிலும் பல ஆண்டுகளாக கன்னட ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
ஆனால், அந்தப் பள்ளிகளை தமிழக அரசு மூடிவிட்டது. இதனால் அங்கு பணியாற்றிய கன்னட மொழி ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது, மாணவர்கள் கன்னடத்துடன் தமிழையும் ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, கன்னடப் பள்ளியில் தமிழை நீக்கவேண்டும்.
தாளவாடியை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும். மேலும், கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசின் சலுகைகள் முழுமையாக வழங்கப்படவேண்டும். கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்காவிட்டால் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகளை மூடக்கோரி மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்த கோரிக்கைகளுடன் தமிழக எல்லையில் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அக்கட்சியினரை கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications