"கப்சிப்"பென்று காவிரியில் 217 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்ட கர்நாடகா....!
சென்னை: காவிரியில் நடப்பாண்டில் இதுவரை 217 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதாம். இது காவிரி டிரிப்யூனல் நிர்ணயித்த அளவை விட 30 டிஎம்சி கூடுதல் என்கிறார்கள் தமிழக அரசுத் தரப்பில்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். இதில் மாதா மாதம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது முதற்கொண்டு கர்நாடகம் ஆண்டுதோறும் தண்ணீரை எப்படி, எந்த காலகட்டத்தில் வழங்க வேண்டும் என்பதையும் நடுவர் மன்றம் தெளிவாக நிர்ணயித்துள்ளது.

ஜூன் முதல் அடுத்த ஜூன் வரை இந்த காலகட்டம் அடங்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மார்ச் வரை காவிரியில் 217 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளதாம். இது (இந்த காலகட்டத்தில்) காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக, 30 டி.எம்.சி. தண்ணீராகும்.
ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும். இருப்பினும் ஏப்ரல் மாதம் இதுவரை 1.4 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அடுத்துள்ள மாதத்திலும் கர்நாடகம் நிர்ணயித்த அளவுக்கு தண்ணீரைத் திறந்து விட்டால் தமிழகத்தின் நீர்ப் பிரச்சினை வெகுவாக தீரும்.
கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபிணி ஆகியவற்றில் போதிய அளவுக்குத் தண்ணீர் உள்ளது. இரு அணைகளிலும் சேர்த்து மொத்தமாக 32 டிஎம்சி அளவுக்கு நீர் உள்ளது. எணவே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications