கையைப் பிடித்து.. காலைத் தொட்டு.. கார்த்திக்கின் கடைசி கட்ட களேபரப் பிரசாரம்!
ராஜபாளையம்: தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்த நடிகர் கார்த்திக் வாக்காளர்களின் காலைப் பிடித்தும், கையைப் பிடித்தும் வாக்கு கேட்பதாக கூறினார்.
கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தோள் கொடுக்க வந்தவரான கார்த்திக் ஆங்காங்கே பிரசாரம் செய்து வருகிறார்.
தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக அவர் ராஜபாளையத்தில் பிரசாரம் செய்து பேசினார். இதே ராஜபாளையத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது சரணாலயம் அமைப்பின் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜபாளையத்தில் நடந்த பிரசாரத்தின்போது உருக்கமாக பேசினார் கார்த்திக். அதிலிருந்து சில...
கிவ் தெம் எ பிக் ஜீரோ...
இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளுக்கும் பரிசாக ஜீரோ கிடைக்க வேண்டும்.
2வது சுதந்திரப் போராட்டம்
1947-ம் ஆண்டைப் போல 2014-ல் 2-வது சுதந்திர போராட்டம் நடந்து வருகிறது. இதில் நாம் ஜெயித்தே ஆக வேண்டும்.
என்னை பாகிஸ்தானுக்கு அனுப்புவீங்களா..
பா.ஜ.கவுடன் பீகாரில் கூட்டணி வைத்துள்ள கட்சியின் வேட்பாளர், மோடி பற்றி தவறாக பேசினால் பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று கூறி உள்ளார். அவர் என்னை அங்கு அனுப்ப முடியுமா?
அந்தமானுக்கு அனுப்பனும் அவரை
மோடியை அந்தமான் தீவுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் அவரை யாரும் தொந்தரவு செய்ய முடியாது.
பணம் தருவது காங்கிரஸ்தான்
தேசப்பற்று உள்ள யாரும் அவருடன் கூட்டணி வைக்க மாட்டார்கள். 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது, உங்கள் பணம் உங்களுக்கே எனத் தருவது காங்கிரஸ்.
பேட்டி கொடுக்கத்தான் லாயக்கு
எதிர்க்கட்சியினருக்கு பாராளுமன்றக்கூட்டத்தில் எந்த மசோதாவையும் தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, வெளியேறி அனைத்து தேசிய தொலைக் காட்சிகளிலும் பேட்டி அளிக்கத்தான் தெரியும்.
கையைப் பிடித்து.. காலைத் தொட்டு
வரும் தேர்தலானது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தர்ம யுத்தம். சாதி, மதவெறி பிடித்தவர்களை ஆட்சியில் ஏற்றக் கூடாது என்று உங்கள் கை பிடித்து, காலைத் தொட்டு கேட்கிறேன் என்றார் கார்த்திக்.
ஒரே தள்ளுமுள்ளு
பேசி முடித்து விட்டு காரைப் பார்க்க கிளம்பிய கார்த்திக்கைக் காண தொண்டர்கள் முண்டியடித்ததால் ஒரே தள்ளுமுள்ளாகி விட்டது. போலீஸார் உடனே தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டியடித்தனர்.