'சிறுவன் கார்த்தி சிதம்பரத்தின்' கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: இளங்கோவன் நறுக்
சென்னை: கார்த்தி சிதம்பரத்தை சிறுவன் என்று வர்ணித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் இளங்கோவன், அவரது கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார்.
இரு நாட்கள் முன்பு நிருபர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்திடம், ஜெயலலிதா-மோடி சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சனம் செய்தது சரிதானா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி "அரசியல்வாதிகள் தங்கள் பேச்சில் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதும், திசை திருப்பும் வகையில் பேசுவதும் தமிழக அரசியல் வரலாற்றில் வழக்கமானதுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு அதை தாண்டக்கூடாது.

முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த விசயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எல்லை தாண்டிவிட்டார். அதே நேரத்தில் அதற்காக நடக்கும் வன்முறை சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளதக்கதல்ல" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவனிடம், ஜெயலலிதா-மோடி குறித்த உங்களின் விமர்சனம் சரியில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இளங்கோவன் "நான் சிறுவர்களுக்கு பதில் கொடுப்பதில்லை. எனவே கார்த்தி சிதம்பரத்துக்கு பதில் கொடுப்பது எனது வேலையில்லை. கடந்த சில நாட்களாக ஏர்செல் டீலிங் தொடர்பாக, அவரது நிறுவனம் குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டுள்ளன. அந்த வழக்கை அவர் கவனிக்கட்டும்" என்று பதில் அளித்தார் இளங்கோவன். இவ்வாறு இளங்கோவன் கூறியபோது, சத்தியமூர்த்தி பவனில் குழுமியிருந்த காங்கிரஸ் கட்சியினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
சொந்த கட்சிக்குள்ளேயே இரு முக்கிய பிரமுகர்கள் பொதுவெளியில் விமர்சனம் செய்துகொள்வது காங்கிரஸ் கட்சியினரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications