இலவசத்தை காட்டுவாங்க ஏமாந்துறாதீங்க- ஆர்.கே.நகர் மக்களுக்கு கார்த்தி சிதம்பரம் அறிவுரை
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணம் மற்றும் இலவசத்துக்கு ஆசைப்படாமல் மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள் என்று கார்த்தி ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்த அவருடைய அறிக்கையில், "தேர்தல் திருவிழா நடைபெறுகிற ஆர்.கே. நகர் தொகுதி மக்களுடன் ஓர் பகிர்வு. தமிழகத்தில் தேர்தல் என்பது விசித்திரம் அல்ல.

வாக்களிக்கும் மக்களும் புதியவர்கள் அல்ல. ஆனால் வேட்பாளர்களும், வாக்களிப்போரும், அதை எதிர்கொள்கிற விதம்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அவலம்.
அமெரிக்காவில் கருப்பர்களுக்கு சட்டப்படி வாக்குரிமை இருந்தும் அவர்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத அவல நிலையை எதிர்த்து மார்டின்லூதர்கிங்கும், தென்ஆப்பிரிக்க மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து நெல்சன் மண்டேலா போன்ற தியாக சீலர்கள் பெரும் போராட்டங்களை மேற்கொண்டு ஆதிக்க சக்தியின் பிடியிலிருந்து மீட்டு வளர்ந்த ஜனநாயகம்.
இத்தேர்தலில் நான் சார்ந்திருக்கும் அரசியல் இயக்கம் பங்கேற்காவிட்டாலும் ஒரு சாதாரண இந்திய குடிமகனாக மனதில் பட்டதை வெளிப்படையாக உங்களிடம் பகிர்கிறேன். இதை பார்க்கின்ற போதும், படிக்கின்ற சில வினாடிகளாவது இது ஓர் புதிய சிந்தனைக்கான விதையாகட்டும்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் தான் நினைவில் நிற்கிறது. அடுத்து ஸ்ரீரங்கத்தில் நடந்தவை யாரும் மறந்து இருக்க முடியாது.
நம் முன்னோர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும், கிடைத்த வெகுமதியான ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை கூறுபோடுவது எந்த வகையில் நியாயம்?
பணத்திற்கும், மூக்குத்திக்கும், பிரியாணிக்கும் மற்றும் இலவச பரிசு பொருள்களுக்கும் உரிமையை பறிகொடுக்காமல், சுதந்திரத்துடனும், சுய மரியாதையுடனும் நம்மை ஆட்சி செய்பவர்களை நம்முடைய மனசாட்சியின்படி தேர்ந்தெடுப்போம் என்கிற உறுதி ஏற்போம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications