கார்த்திகை சோமவாரம் – சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம்: பெண்கள் வழிபாடு
குற்றாலம்: கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள், குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வலியுறுத்தி கொடிமரத்துடன் சேர்த்து சித்சபையை 108 முறை வலம் வந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடாரஜமூர்த்தியை தரிசித்தனர்.
ஆலயங்களில் சங்காபிஷேகம்
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே அவரை குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர்,காரணீஸ்வரர், வெள்ளீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர் ஆகிய ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருக்குற்றாலநாதர் ஆலயம்
குற்றாலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் மெயினருவில் குளித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்.
கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வாரமும் முதல் நாள் கார்த்திகை சோமவார சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இந்த சோமவாரத்தில் பெண்கள் கணவருக்கு நீண்ட ஆயுளை வேண்டி அதிகாலை வேளையில் குற்றால அருவியில் நீராடி அருகில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் பூஜை நடத்தி தாலியில் பொட்டு வைத்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்தாண்டு கார்த்திகை மாதத்தின் மூன்றாவது வாரம் திங்களன்று குற்றாலம் மெயின் அருவியில் ஏராளமான பெண்கள் அதிகாலை 5 மணிக்கு நீராடி அருகில் உள்ள செண்பக விநாயகர் கோவிலில் 11 முறை சுற்றி வந்து நாக கன்னிகளுக்கு பழம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். இந்த சோமவார பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.