இளங்கோவனுக்கு கட்சியினரை அனுசரித்துப் போகவே தெரியவில்லை: கா.சி. பாய்ச்சல்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்சியினரை அனுசரித்து செல்வது இல்லை அவ்வாறு செய்ய அவருக்கு தெரியவும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன், எம். கிருஷ்ணசாமி உள்ளிட்ட 11 பேர் டெல்லி சென்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகு அவர்கள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து அதே கோரிக்கையை விடுத்தனர். சோனியா கூறினால் பதவி விலகத் தயார் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளங்கோவன் பற்றி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி கூறுகையில்,
இளங்கோவனுக்கு கட்சியினரை எப்படி அனுசரித்து செல்வது என்றே தெரியவில்லை. பொது இடங்களில் அநாகரீகமாக நடக்கிறார். ராஜீவ் பற்றி பேசிய கோவனுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்திற்கு அவர் தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கது என்றார்.