அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்: ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ இன்று வேட்புமனு தாக்கல்
சென்னை : தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களான முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய மூவரும் இன்று மனு தாக்கல் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் களம் அனலடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மூன்று முக்கிய தலைவர்களும் கட்சியின் வேட்பாளர்களும் ஒரே நாளில் மனு தாக்கல் செய்ய உள்ளதால் நாளைய தினம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வரும் 29ம் தேதியுடன் மனு தாக்கல் முடிகிறது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேய்பிறை நாட்கள்
வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நாட்கள் தேய்பிறையாக இருந்தாலும் அதிலும் சில நல்ல நாட்கள், முகூர்த்த நாட்களை தேடி வருகின்றனர் வேட்பாளர்கள். வெள்ளிக்கிழமை பிரதமை திதி என்றாலும் தமிழகம் முழுவதும் 4 பெண்கள் உட்பட 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

திருவாரூரில் கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த தொகுதியான திருவாரூரில் 2வது முறையாக போட்டியிடுகிறார். அவர் இன்று மதியம் மனு தாக்கல் செய்கிறார். திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முத்து மீனாட்சியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். முன்னதாக காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

ஜெயலலிதா இன்று மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவருமே இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கும் ராசி எண் 7 வருகிறது. அதோடு இன்றைய தினம் துர்முகி ஆண்டின் சுபமுகூர்த்த தினமாகும். ஜோதிடர்களின் அறிவுறுத்தல்படி இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் ஜெயலலிதா.

234 தொகுதிகளிலும் அதிமுகவினர்
திங்கட்கிழமையன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 233 வேட்பாளர்களும் மனு செய்ய உள்ளனர். அதாவது- இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகோ மனு தாக்கல்
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை 11 மணிக்கு, கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

திருமாவளவன்
விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் சட்ட சபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாளை அவர் காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதே போல், பா.ஜ.க வேட்பாளர்களும் அன்றுதான் மனுதாக்கல் செய்கிறார்கள்.

நல்ல நேரம்
இன்று சித்தயோகம், சங்கட கர சதுர்த்தியுடன் சுப முகூர்த்த தினம் ஆகும். காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை எம கண்டம் என்பதால் 12 மணிக்கு மேல் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விஜயகாந்த், ஸ்டாலின்
இதே போல் உடுமலைப் பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் 27ம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நலக்கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அடுத்தடுத்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகள் கண்காணிப்பு
வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து வேட்பாளர்கள் செய்யும் ஒவ்வொரு செலவையும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம்.

மே 2ம் தேதி வாபஸ்
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 30ம் தேதி நடக்கிறது. மே 2ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு அன்றைய தினம் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications