ஜெ. கைதால்... அறிவாலயத்திற்குக் கூட வர முடியாமல் வீட்டிலேயே தங்கியிருக்கும் கருணாநிதி!
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், தொடர் போராட்டங்கள் நடந்து வருவதாலும், மக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீது ஒரு வித அனுதாப அலை வீசுவதாலும் திமுக தலைவர் கருணாநிதியை முடிந்த வரை வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
மேலும் ஜெயலலிதா சிறைக்குப் போன நாள் முதல் அவர் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்குக் கூட போகாமல் தனது கோபாலபுரம் வீ்ட்டிலேயே இருந்து வருகிறாராம். 2 நாட்களுக்கு முன்புதான் அவர் தனது சிஐடி காலனி வீட்டுக்குப் போய் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது போலீஸார் கொலை முயற்சி, தாக்குதலைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளதாலும், அதிமுகவினர் போராட்டம் எதிரொலியாகவும் கருணாநிதி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

சிறைக்குப் போன ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கருணாநிதி மீது வழக்கு
ஜெயலலிதா சிறைக்குப் போன தினத்தன்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டைத் தாக்க அதிமுகவினர் திரண்டு வந்தனர். அவர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தியபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் அதிமுகவினர் சிலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை பாயுமா
இந்த வழக்கில் கருணாநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

என்.எஸ்.ஜி எஸ்.பி வருகை
இந்த நிலையில் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்எஸ்ஜி கமாண்டோ படையின் எஸ்.பி. வந்து கருணாநிதியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை சீரடையும் வரை, நீங்கள் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறித்து ஆய்வு
மேலும் கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்து விட்டுப் போயுள்ளாரம்.

வீட்டோடு இருக்கிறார் கருணாநிதி
இந்த பிரச்சினை காரணமாக தற்போது கருணாநிதி வீட்டோடு இருந்து வருகிறாராம். கோபாலபுரத்திலிருந்து நேற்றுதான் சிஐடி காலனி வீட்டுக்கு அவர் போய் விட்டு வந்தாராம். அண்ணா அறிவாலயத்திற்கு அவர் போய் 5 நாட்களுக்கும் மேலாகிறது என்கிறார்கள்.

கருப்புச் சட்டைப் போராட்டத்தோடு சரி
கடந்த 25ம் தேதி கருப்புச் சட்டைப் போராட்டத்தை திமுக நடத்தியது. அதில் கலந்து கொண்ட பின்னர் கருணாநிதி எங்குமே போகவில்லை. 27ம் தேதிதான் ஜெயலலிதா சிறைக்குப் போனார் என்பது நினைவிருக்கலாம்.

கோபாலபுரத்திற்கு வந்த ராசாத்தி
கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் 2 நாட்களுக்கு முன்பு தனது மகள் கனிமொழியோடு கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் வந்திருந்தாராம். உடன் சாப்பாடும் கொண்டு வந்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியே வரும் வரை
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து அவர் வெளியே வரும் வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

அமைதியில் திமுக
ஜெயலலிதா வழக்கு குறித்து திமுக தரப்பு அமைதி காத்து வருகிறது. தீர்ப்பு வந்த சமயத்தில் திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் அறிக்கை விடுத்தார். ஆனால் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பலமான அலை வீச ஆரம்பித்ததும், திமுக தரப்பு அமைதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்காலத்தில்தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்தான், வழக்கை வெளி மாநிலத்திற்கு மாற்றக் கோரி வழக்குப் போட்டு அதில் வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications