அதிமுகவில் நடப்பது அனைத்தும் வழக்கமான கபட நாடகங்களே: கருணாநிதி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர்கள் மீது தற்போது வெளிப்படையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் கபட நாடகங்கள்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், 27-8-1996 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஒரு குடும்பத்தோடு எனக்கிருந்த தொடர்பை மையப்படுத்தி கடந்த சில மாதங்களாக எனக்கு எதிராக எழுந்த கழகத்தினர் சிலரின் விமர்சனம், பத்திரிகைகளின் கேலி, எதிர்மறையான அரசியல் விமர்சனங்கள் ஆகியன குறித்து, இன்று என் நிலையை வெளிப்படையாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

karunanidhi allegation on admk chief jayalalithaa

கழகச் செயற்குழுக் கூட்டத்தில் எனது உரையில் தோல்விக்குக் காரணமாக நான் குறிப்பிட்டிருந்த சில காரணங்களுள் முக்கியமானதொரு காரணமாக ஒட்டுமொத்தமாக எல்லோராலும் கூறப்படும் காரணம், எனக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்குமிடையே இருந்த தொடர்பேயாகும்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு அதிகார மையமாகவும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிகார வட்டமாகவும் செயல்பட்டு வந்துள்ளார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிப் பத்திரிகைகள் ஏராளமாக எழுதியுள்ளன. பொது மேடைகளிலும் தெருமுனைகளிலும் இக்குடும்பத்தைப் பற்றி பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. இவற்றில் சில உண்மைச் சம்பவங்களும் செய்திகளும் உண்டு.

சசிகலா என் வீட்டிலேயே தங்கியிருந்ததால் அவரது உறவினர்கள் சிலரது விமர்சனத்திற்குரிய நடவடிக்கைகள் எனது அனுமதியோடும் ஆதரவோடும்தான் நடைபெற்றன என்ற தவறான அபிப்பிராயத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தது. எனவே கட்சி பெரிதா? அல்லது சசிகலாவுடனான தொடர்பு பெரிதா? என்று நான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என கழக உடன்பிறப்புகள் வற்புறுத்துவதால் அனைவரது விருப்பத்திற்கேற்ப சசிகலாவோடும் அவரது குடும்பத்தினரோடும் எனக்கு இருந்த தொடர்புகள் அனைத்தையும் இந்த நாள் முதல் விலக்கிக் கொள்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் முதல் எனக்கு வளர்ப்பு மகன் என்று எவரும் கிடையாது என்பதைத் திட்டவட்டமாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க சசிகலாவிடமிருந்தும், சுதாகரனிடமிருந்தும் என்னை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது" என்று ஏதோ கட்சியையும், தனது வீட்டையும் சுத்திகரிக்க முனைந்து முடிவெடுத்து விட்டவரைப் போல ஜெயலலிதா வேடம் போட்டாரே! நாட்டு மக்கள் மறந்தா விட்டனர்?

இவ்வாறு நாடகத்தில் வரும் தனி மொழியைப் போல எழுதப்பட்ட கடிதத்திற்கு எத்தனை நாட்கள் உயிர் இருந்தது? அந்தக் கடிதத்தில் எழுதியவற்றில் எத்தனை நாட்கள் ஜெயலலிதா உறுதியோடு இருந்தார்?

மறுபடியும் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவோடு இணைந்து ஒரே வீட்டில் வாழத் தொடங்கினார்களே; அந்த ஓரங்க நாடகமாவது நீடித்ததா? சில மாதங்களுக்குப் பிறகு, நாடகத்தின் திடுக்கிடும் திருப்பமாக சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓர் அறிக்கை. அவரது கணவரே கைது. மற்றும் நெருங்கிய உறவினர்கள் கைது.

தொடர்ச்சியாக ஏடுகளிலே செய்தி. பின்னர் சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்டார். அவரது கணவர் சிறையிலிருந்து வெளியே வந்து, "நான் பொய்ப் புகாரில் கைது செய்யப்பட்டேன். புகார் கொடுத்தவர்களே தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். என்னை என்கவுண்டர் செய்ய காவல் துறை முயற்சி செய்தது" என்றெல்லாம் கோபம் கொப்பளிக்கச் செய்தியாளர்களிடம் சொன்னார். பின்னர் அவரது கோபமும் குறைந்து, கரைந்து அந்த வழக்கு அப்படியே நீர்த்துப் போய் விட்டது.

இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு பழகிப் போன சம்பவங்கள்; ஏனென்றால் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட காட்சிகள்! அவற்றை நினைவூட்டும் நிகழ்வுகள்தான் தற்போது மீண்டும் தேர்தலையொட்டி காட்சிப்படுத்தப்படுகின்றனவா?

ஓர் அரசில் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. அமைச்சர்கள் தவறு செய்தால், அந்தத் தவறுகளுக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இந்த ஐந்தாண்டு காலத்தில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்? அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள் என்றால், அமைச்சர்கள் தவறுகளும் முறைகேடுகளும் செய்த காரணத்தால்தான் மாற்றப்பட்டார்கள்.

அப்படி மாற்றப்பட்ட அமைச்சர்கள் சிலரே பிறகு மீண்டும் அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்கனவே செய்த தவறு என்ன ஆயிற்று? முறைகேடுகள் செய்த அமைச்சர்களை நீக்குவதும், பின்னர் அந்த முறைகேடுகள் மக்களுக்கு மறந்து போனதும் மீண்டும் சேர்த்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்ததுதானே?

பொதுமக்களின் நினைவாற்றல் குறைவானது என்பதை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? ஓர் அமைச்சரவையில் தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா? ஓர் ஆட்சியிலே உள்ள அமைச்சர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது என்பது ஆச்சரியமல்ல.

ஒரு அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களைப் பற்றி, ஆட்சியினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்ற நேரத்தில், அந்த அரசைப் பற்றி தனியே விளக்கம் வேறு கூறிட வேண்டுமா? தொடர்ச்சியாக நடக்கும் நாடகங்களைப் பற்றியும் இந்த வேடிக்கை வினோதங்களைப் பற்றியெல்லாம் பொதுமக்களிடம் விளக்கம் அளித்து நினைவூட்டிட வேண்டியது கடமை அல்லவா?'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+