அதிமுகவினர் ஆடம்பரமாக செலவு செய்கின்றனர்... விவசாயிகள் வேதனையில் உள்ளனர் - கருணாநிதி
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் விரக்தியை விதைத்து வேதனையை அறுவடை செய்வதாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை: 500, 1000 ரூபாய் செல்லாது என்ற உத்தரவால் மக்கள் படும் அவதி குறித்தும் ஜெயலலிதாவுக்கு கவலை இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவினர் தாங்கள் குவித்து வைத்துள்ள பணத்தை 3 தொகுதிகளிலும் ஆடம்பரமாக செலவழிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் விரக்தியை விதைத்து வேதனையை அறுவடை செய்வதாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை:
இடைதேர்தல் வேட்பாளர்களும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், தோழமை கட்சிகள் என அனைவரும் பம்பரமாக சுழன்று, சுழன்று பனி புரிந்து வருகிறார்கள். இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கழகத்தின் தலைவர் என்ற முறையிலே நான் நேரடியாக வரவியலாது போய்விட்டாலும், என் உடல் நலக் குறைவைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அன்றாடம் அங்குள்ள நிலவரம் குறித்து ஏடுகளில் படித்தறிந்து வருகிறேன்.
வாக்காளர்களுக்கு நான் விடுக்கும் வாஞ்சைமிகு வேண்டுகோள் !
— KalaignarKarunanidhi (@kalaignar89) November 16, 2016
Read: https://t.co/tcCRzGjM1J
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் நேரில் செல்லாவிட்டாலும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழக முன்னணியினர், தொண்டர்கள் அனைவரும் தொகுதிகளிலேயே முகாமிட்டு இடையறாது வாக்கு கேட்டு வருகிறார்கள்.
இந்த நேரம் பார்த்து மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள காரணத்தால், தேர்தல் பணியாற்றும் கழகத் தோழர்களுக்கு உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலையில் திண்டாடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவினர், அமைச்சர்களின் தலைமையில் தாங்கள் குவித்து வைத்துள்ள தொகையை ஆடம்பரமான முறையிலே செலவழித்து குதூகலம் கொண்டாடி வருகிறார்களாம்.
மேலும், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், ஏழையெளிய, அடித்தட்டு மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி நாளேடுகளில் தொடர்ச்சியாகப் பக்கம் பக்கமாக வந்து கொண்டுள்ளன. அவ்வாறு துன்பமுறும் மக்களுக்கு ஆறுதலாகவோ, ஆதரவாகவோ, தமிழக அரசு மக்கள் படும் இன்னலைக் குறைத்திட ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பது பற்றியோ அறிக்கை விடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கோ, அ.தி.மு.க. ஆட்சியினருக்கோ நேரமும் இல்லை, நினைப்பும் இல்லை. ஆனால், அவசர அவசரமாக, தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றால், அ.தி.மு.க. வினர் எதை முக்கியமாகக் குறி வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
இந்த இடைத் தேர்தல்கள் மூலம், செயல் திறனற்ற அதிமுக ஆட்சிக்கு நல்லதொரு பாடத்தைத் தந்து நல்வழிப்படுத்தப் பாடுபட வேண்டும் என்றும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றி தேடித் தர வேண்டுமென்றும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.