திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு ஆழமானது - கருணாநிதி
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு ஆழமானது, உறுதியானது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஒரே மேடையில் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறைமுகம்-திமுக வேட்பாளர் சேகர் பாபு, திரு.வி.க. நகர் தாயகம் கவி, கொளத்தூர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ்-திமுக இடையிலான உறவு ஆழமானது, உறுதியானது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், 1972-ல் இந்திராவை நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என கூட்டணி அமைத்தது. 1971-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு அளித்து வெற்றிபெற செய்தனர்.
தமிழ்த்தாய்க்கு மதுரையில் சிலை அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் ஜெயலலிதா கூறினார். ஆனால் அது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. இப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் ஜெயலலிதா.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது குறித்து கூறிய கருணாநிதி, ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் 7,567 கொலைகள் நடந்துள்ளன. 11,845 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. தாழ்த்தப்பட்ட சமூதாயத்துக்கு எதிராக 6,479 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications