''நாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை!''

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

அறிக்கையின் தொடக்கத்தில் - குறிப்பு: இந்த அறிக்கை சற்றுக் கடுமையாக எழுதப்பட்டது என்று யாராவது நினைத்தால், முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா 16-10-2013 அன்று விடுத்துள்ள அறிக்கையை முழுவதுமாகப் படித்துப் பார்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Karunanidhi

கருணாநிதியின் அறிக்கை...

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு "நடுங்கா நாக்கழகி" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.

என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள் போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம் அதைத் திசை திருப்பலாம்;

அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள் எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும்.

அந்தக் காலத்திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத் தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்ட போது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று தருக்கு மிகக் கொண்டு தாண்டிக் குதித்தவர் ஜெயலலிதா என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார் படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் (கருணாநிதி) தாக்கி தொண்டர்களைத் தூண்டி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்.

அவருடைய அநாகரீக, அறிமுக அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள தாசானுதாசர்களான ஏடுகள் சிலவும், எகிறிக் குதித்து வெளியிட்டு எக்காள மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றன. பாவம்! பரிதாபத்திற்குரிய தமிழ் மக்கள் !

"தினத்தந்தி"யின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்த போது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்றவில்லை. ஓர் அமைச்சரைக் கூட அதற்காக அனுப்பவில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் நான்கு அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களே, புரிகிறதா?

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இது போன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை போர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்?

எம்.ஜி.ஆர். பற்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால் தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்!

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நுhறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக "எழுச்சி நாள்" கொண்டாடுங்கள் என்று எந்த அண்ணா அவர்கள் அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்ச நீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம். வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம்.

"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்""
என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழையெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக "எழுச்சி நாள்" கொண்டாடுங்கள் என்று தி.மு.கழகத் தோழர்களை யெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி விட்டார்.

அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும்.

அதையெல்லாம் கெடுத்தது யார்? எந்தச் சண்டாளர்கள் கெடுத்தார்கள்?

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்? அந்த வஞ்சகர்கள், வன்கணாளர்கள் அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதி மன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் - அண்ணாவைப் பற்றிப் பேச அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறி வாளர்கள் - நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள் என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள் என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர்கள் யார் என்று புரிகிறதா?

"அண்ணா நாமம் வாழ்க" என்று கூறிக் கொண்டே அவருக்கு பட்டை நாமம் சாற்றுகின்ற சண்டாளத்தனத்தை, தமிழகம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்காது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப் பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.

அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார் போலும்! என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+