மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு எதிரொலி.. கருணாநிதி வீட்டில் அவசர ஆலோசனை
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றது.
சட்டசபையில் கடந்த 17ம் தேதி நமக்கு நாமே பயணம் குறித்த அதிமுக உறுப்பினர் குணசேகரனின் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டு சட்டசபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியே தூக்கிச் செல்லப்பட்டார். மேலும் திமுக எம்.எல்.ஏ.க்களும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் தலைமையில் சட்டசபை முன்பு கடந்த 18ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். மேலும் 19ம் தேதி போட்டி சட்டசபை நடத்தினர். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின்பேரில் போலீசார் ஸ்டாலின் உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துமீறி சட்டசபைக்குள் நுழைய முயன்றது, அனுமதியின்றி கூடியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த வழக்கை திமுக சட்டப்படி சந்திக்கும் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications