தேர்தல் ஆணையம் காட்டும் பூச்சாண்டிக்கு அஞ்சமாட்டோம்: கருணாநிதி
சென்னை: தேர்தல் கமிஷன், ஒரு தலைபட்சமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதனால் தான், தமிழகத்தில் முதன் முறையாக, '144' தடை உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

அனைவருக்கும் சிக்கல்
ஆளும் கட்சியினரால் எங்கள் கட்சியினரும், பொதுமக்களும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இதையெல்லாம், தேர்தல் கமிஷன் கவனிக்க மறந்து விட்டது.
பொறுப்பற்ற ஆணையம்
தேர்தல் கமிஷன் தன் பொறுப்பை தட்டி கழித்து செயல்படுகிறது. இதன் பாதிப்பு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை,நாம், ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தையும் பார்த்து விட்டோம்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவு
தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டால் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தேர்தல் கமிஷனே, ஆளும் கட்சியினருக்கு மேடை போட்டு, 'ஆளும்கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.
வாக்காளர்களுக்கு பணம்
இந்த தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என எனக்கும் தெரியும்; தேர்தல் கமிஷனுக்கும் தெரியும்; ஆளும்கட்சியினருக்கும் தெரியும்.ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் தேர்தலில் தோற்றுள்ளனர். ஆனால், அவர்கள் குறுக்கு வழியில், வாக்காளர்களுக்கு, பணம் கொடுத்து, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என, எண்ணவில்லை.
குறுக்குவழியில் வெற்றி
அது போல் தான், நானும் செயல்பட்டு வருகிறேன். ஆனால், அ.தி.மு,க வினர் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, குறுக்கு வழிகளில் ஈடுபட்டுள்ளனர். இதை, தேர்தல் கமிஷன் கவனிக்காமல், ஒருதலைப்பட்சமாக ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது.
பூச்சாண்டிக்கு அஞ்சமாட்டேன்
தேர்தல் கமிஷனின் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எனவே, லோக்சபா தேர்தலில் எனக்கு நம்பிக்கையில்லை.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழிப்புணர்வு தேவை
இதேபோல ஓட்டு எண்ணிக்கை மையங்களில், வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் விழிப்பாக இருக்க வேண்டும்,'' என, கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என, எந்தக் காரியத்தையும் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றன.
மின்னணு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்களுக்காக, நியமனம் செய்யப்பட்டுள்ள ஏஜன்ட்கள், கண்ணும் கருத்துமாகவும், மிகுந்த எச்சரிக்கையோடும், செயல்பட வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு பெட்டிகள் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போதும், அவை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படுவது வரை, மிகவும் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
எச்சரிக்கைத் தேவை
கடந்த சில நாட்களாக, சுறுசுறுப்பாக பணியாற்றி விட்டு, கடைசி இரண்டு நாட்களில், ஏமாந்து விடக் கூடாது; எச்சரிக்கை தேவை. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications