93 வயதல்ல 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் - விழுப்புரத்தில் கருணாநிதி பேச்சு
விழுப்புரம்: 93 வயதல்ல, 103 வயதானாலும் மக்களுக்காக பணியாற்ற உள்ளதாக விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
விழுப்புரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். உளுந்தூர்பேட்டை - வசந்தவேல், திருக்கோவிலூர் - பொன்முடி, சங்கராபுரம் - உதயசூரியன், கள்ளக்குறிச்சி - காமராஜ், விழுப்புரம் - அமீர் அப்பாஸ் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ) ஆகியோர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: நீதிமன்ற வழக்கில் பொன்முடிக்கு தற்போது கிடைத்துள்ள வெற்றி திருக்கோவிலூரிலும் கிடைக்கும். திமுக பெறவுள்ள வெற்றிக்கு அச்சாரமாக பொன்முடியின் வெற்றி அமைந்துள்ளது எனக் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: யாராலும் திமுகவை வீழ்த்த முடியாது. வெற்றி கொள்ளவும் முடியாது.
தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். தி.மு.க., என்பது சமுதாய பேரியக்கம். நினைத்ததை சாதிக்கும், உங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்காகவே பணியாற்றுவேன், பாடுபடுவேன்.
சமீபத்தில் சென்னையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்திக்கவில்லை. அப்போது கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் மதுவிலக்கு சட்டமாக்கப்படும். மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு தான். ஜெயலலிதா கூறும் படிப்படியான மதுவிலக்கு என்றால் என்ன என கேள்வி எழுப்பினார் கருணாநிதி.
மேலும், நான் இளைஞர்களை நம்பியிருக்கிறேன். இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு. இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தவே நான் சுற்றி வருகிறேன்.
நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என கருதுகிறேன். எனக்கு 93 வயது ஆகிறது. என்னை ஓய்வெடுக்குமாறு சிலர் கூறுகின்றனர். 93 அல்ல 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications