போனையே எடுக்காத அழகிரி இப்போதாவது நேரில் வந்து சந்தித்தாரே...... கருணாநிதி 'நெகிழ்ச்சி'
நீண்ட நாட்களுக்கு பின்னர் தம்மை மகன் மு.க. அழகிரி நேரில் சந்தித்து பேசியதில் திமுக தலைவர் கருணாநிதி நெகிழ்ச்சியடைந்துள்ளாராம்.
சென்னை: எத்தனையோ முறை போனில் முயற்சித்தும் கண்டுகொள்ளாத மு.க. அழகிரி இப்போதாவது தம்மை வந்து சந்தித்ததாரே என கருணாநிதி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாராம்.
திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டு 2 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இதன் பின்னர் திமுக தொடர்பான விவகாரங்களில் அவ்வளவாக அழகிரி தலையிடுவதில்லை. ஆனால் அழகிரியின் மகன் தயா அழகிரி அவ்வப்போது திமுகவினரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வந்தார்.

மேலும் கோபாலபுரம் வந்து செல்லும் அழகிரி தாயார் தயாளு அம்மாளை மட்டுமே சந்தித்துவிட்டு செல்வார். மேல் தளத்தில் இருக்கும் கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திடீரென கருணாநிதியை சந்தித்து பேசினார் அழகிரி. இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. இதனிடையே தம்முடைய உதவியாளர் நித்யாவிடம் அழகிரிக்கு போன் போடுமாறு கருணாநிதி சொல்லுவதும் ஆனால் அந்த போனை எடுக்காமல் தவிர்ப்பதுமாக அழகிரி இருந்து வந்தார்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இருந்தபோதும் கருணாநிதி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே இன்று திடீரென கோபாலபுரம் வந்த அழகிரி தந்தை கருணாநிதியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதுவரை போனடித்தும் நம்மை வந்து சந்திக்காத மகன் இப்போதாவது நம்மை வந்து சந்தித்தாரே என நெகிழ்ந்து போனாராம் கருணாநிதி என்கின்றன திமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications