தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்: விஜயகாந்த்துக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அண்மையில் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த்தை சந்தித்தனர்.
அப்போது மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று அவர்கள் விஜயகாந்த்திடம் வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இந்த சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
செய்தியாளர் :- மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசியது பற்றி?
கருணாநிதி: அந்தச் சந்திப்பு பற்றி விஜயகாந்தின் வாயினால் எந்தக் கருத்தும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த நிலையில் நானும் அது பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
செய்தியாளர் : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களை உங்கள் கூட்டணியில் சேர்ப்பது பற்றிய ஆலோசனை இன்றைய கூட்டத்தில் நடத்தப்பட்டதா?
கருணாநிதி: தி.மு. கழகத்தின் சார்பில் கூட்டணி உருவாக்கும்போது, விஜயகாந்தும் அந்தக் கூட்டணியிலே இருக்கவேண்டுமென்ற விருப்பம் எங்களுக்கு உண்டு. அது பற்றி அவர் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை.
செய்தியாளர் : விஜயகாந்த் அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
கருணாநிதி: நான் சொல்வதே அழைப்பு தான்.
செய்தியாளர்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி எந்த அளவு உள்ளது?
கருணாநிதி: தி.மு. கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முக்கால் பகுதி பணிகள் முடிந்து விட்டன.
பொதுக்கூட்டங்களில் தி.மு.க. இறங்கி வந்து கூட்டணி குறித்து பேச வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசிவரும் நிலையில் கருணாநிதியின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications