எங்களைப் பார்த்து கருணாநிதிக்கு கலக்கம்... சொல்கிறார் வைகோ
சென்னை: நாங்கள் விஜயகாந்தை அழைத்தது கருணாநிதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் . விஜயகாந்தை நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் அழைக்க வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 6 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொள்கை திட்ட கூட்டணி. மக்கள் நலக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாத பலமிக்க கவசதன்மை மிக்க நம்பிக்கைதன்மை கொண்டது. 65 சதவீத இளைய தலைமுறையின் கருத்து தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார்.
வெள்ளச்சேதத்தின் போது அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது. மக்களின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெள்ளச் சேதத்துக்கு நாங்கள் கேட்ட ரூ.50 ஆயிரம் கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கவில்லை. எனவே செயலற்ற மாநில அரசையும், நிவாரணம் ஒதுக்காத மத்திய அரசையும் கண்டித்து வருகிற 31ம்தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறிய வைகோ, இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.
விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான நீங்கள் சந்தித்து பேசியுள்ளீர்கள். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளாரே? என்று வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் மதியம் விஜயகாந்தை சந்தித்து பேசினோம். அதன் பிறகு 3 மணி நேரத்துக்கு பிறகு தி.மு.க. தலைவரும் அழைத்துள்ளார். நாங்கள் விஜயகாந்தை அழைத்தது அவருக்கு கலக்கத்தை உருவாக்கி உள்ளது. நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் விஜயகாந்தை அழைக்க வேண்டுமா? அதற்கு முன்பே அழைத்திருக்கலாமே? விஜயகாந்தை கலைஞர் அழைத்ததற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து விஜயகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.