கருணாநிதி நலமாக இருக்கிறார்.. சுற்றி நடப்பது தெரிகிறது.. படத்தை பாருங்கள் புரியும்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையின் ஐசியூ வார்டில் கருணாநிதிக்கு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பல்வேறு கட்சி தலைவர்கள் கருணாநிதி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் வந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்பி கனிமொழி மற்றும் குடும்பத்தாரிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்.

உடல்நிலை சீராக இருந்தது
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு வந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் நேரடியாக கருணாநிதியை பார்க்கக் கூடிய வாய்ப்பு பெற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் திமுக சார்பில் வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதியின் ரத்த அழுத்தம், இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு, சுவாச எண்ணிக்கை போன்றவை சீராக இருப்பது மருத்துவமனை மானிட்டரில், பதிவாகியிருந்த தகவல்கள் அடிப்படையில் உறுதியானது.

ராகுல் காந்தி
இதன் பிறகு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். ஆனால் புகைப்படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக ஐசியூ வார்டுக்கு சென்று கருணாநிதியை பார்க்க அனுமதிக்கப்பட்டார். இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

காதில் சொல்லும் ஸ்டாலின்
இந்த படத்தில் கருணாநிதி மேலே பார்த்த நிலையில் படுக்க வைக்கப்பட்டு உள்ளார். அவரது கண்கள் லேசாக திறந்த நிலையில் உள்ளன. அவரை ராகுல் காந்தி புன்முறுவலோடு, பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது கருணாநிதியின் காது அருகே ஸ்டாலின் சென்று ஏதோ சொல்கிறார். ராகுல் காந்தி வந்துள்ள தகவலை கருணாநிதியின் காதில் ஸ்டாலின், சொல்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது. இதன் மூலம் கருணாநிதி சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளும் திறனுடன் இருப்பது உறுதியாகிறது. அவர் சுயநினைவோடுதான் உள்ளார்.

செயற்கை சுவாசம் இல்லை
இந்த படத்தில் கருணாநிதி வழக்கமாக அணிய கூடிய கருப்பு கண்ணாடி அணியப்படவில்லை. எனவே கண்கள் திறந்து இருப்பது நன்கு தெரிகிறது. வெங்கையா நாயுடு நேரில் சந்தித்தபோது கருணாநிதி ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் படுத்திருந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. இன்று, அவரது முகம் ஓரளவுக்கு முழுமையாகத் தெரியும் அளவுக்கு படம் வெளியாகி உள்ளது. இதிலும் அவருக்கு செயற்கை சுவாசமோ, உயிர்காக்கும் வேறு கருவிகள் உதவியோ கிடையாது. எனவே அவர் நோய்வாய்ப்படவில்லை என்பது உறுதியாகிறது.

தொண்டர்கள் குஷி
இதுகுறித்து திமுக திமுக ஆர் எஸ் பாரதி கூறுகையில் நான்கு நாட்களாக பல ஆயிரம் தொண்டர்கள் காவேரி மருத்துவமனையின் வெளியே கருணாநிதி உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்கான ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவர்களுக்கு இந்த படம் ஒரு ஆறுதலை தரும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்












Click it and Unblock the Notifications