என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே.. இன்னும் சில நாட்களில் மீண்டும் கருணாநிதியின் குரல்!
திமுக தலைவர் கருணாநிதி ஓரிருநாட்களில் பேசக் கூடிய அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புவார் என அவரது மருத்துவர் கோபால் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஓராண்டுக்குப் பின்னர் உடல்நிலை தேறி முரசொலி அலுவலகத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி திரும்பிச் செல்லும்போது புன்சிரிப்புடன் கையை உயர்த்தி காண்பித்தார். அத்துடன் கருணாநிதியின் மருத்துவர் கோபால், ஓரிருநாட்களில் இன்னொரு அதிசயம் நடைபெறும் என கூறியிருக்கிறார். ஆகையால் கருணாநிதி வழக்கமான கரகர குரலில் என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகம் வந்தார். அங்கு சுமார் 40 நிமிடங்கள் முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை சுற்றிப் பார்த்தார்.
மகிழ்ச்சியை பகிர்ந்த் கருணாநிதி
பின்னர் புறப்படும்போது முரசொலி மாறன் சிலையை சிறிது நேரம் பார்வையிட்டார். அப்போது காரில் இருந்த படியே புன்சிரிப்புடன் கையை உயர்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கருணாநிதி.
ஓரிரு நாட்களில் அதிசயம்
மேலும் கருணாநிதியின் மருத்துவர் கோபால் கூறுகையில், கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கப் போகிறீர்கள் என்றார்.
பேசப் போகும் கருணாநிதி
கருணாநிதி விரைவில் பேசப் போகிறார்.. வழக்கம் போல என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே.. என கரகர குரலில் பேசுவார் என்பதையே மருத்துவர் கோபால் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இனிப்புகள் வழங்கினர்
கருணாநிதி உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.