கபாலி டிக்கெட் கேட்ட பிஏவை நீக்கினீங்களே? கபாலியை வெளியிட்ட சசிகலாவுக்கு தண்டனை என்ன? கருணாநிதி
சென்னை: கபாலி படத்துக்கு டிக்கெட் கேட்ட அமைச்சரின் உதவியாளர் நீக்கப்பட்ட நிலையில் கபாலி படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் முதல்வர் வீட்டில் உள்ள சசிகலாவுக்கு தண்டனை என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொண்டனர் இடதுசாரிகள். ஆனால் இடதுசாரிகள் படுபயங்கர தோல்வியைத் தழுவினர்.
சட்டசபையில் இடதுசாரிகள் கோலோச்சிய காலம் போய் இப்போது ஒருவர் கூட எம்.எல்.ஏ.வாக இல்லை என்கிற நிலை உருவானது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் இடதுசாரிகளை கருணாநிதி விமர்சித்துள்ளார். அதேபோல் கபாலி திரைப்பட சர்ச்சை குறித்தும் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இடதுசாரிகள்
கேள்வி: பொதுவுடைமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக, தமிழகச் சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டுக் காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டு விட்டதே?
பதில்: உண்மைதான்! அதைப்பற்றி நாம் கூறினால், நம்மைக் கடுமையான வார்த்தைகளால் தாக்குவதில்தான் அந்த ஒரு சிலர் கவனம் செலுத்துகிறார்கள். கம்யூனிசக் கொள்கைகள் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்படாமல் இருக்கிறதே என்று நாம்தான் வருத்தப்படுகிறோமே தவிர, அந்தக் கட்சியின் தலைவர்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை.

கபாலி விவகாரம்...
கேள்வி: கபாலி" திரைப்படத்திற்கு பத்து டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டுமென்று கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாராமே?
பதில்: படத்திற்கு டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பியதற்காக என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே, அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையை முதல் அமைச்சரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் (ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) பெற்று, கோடிக்கணக்கிலே இலாபம் அடைகிறாரே, அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா என்று அந்த உதவியாளர் கேட்காமல், கேட்கிறாராம்!

கல்வி கடன்
கேள்வி: மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே?
பதில்: மிகப் பெரிய கொடுமைதான்! மாணவர்கள் படிப்புக்காக வங்கிகளில் கடன் பெற்றது உண்மைதான். வேலைக்குச் சென்றால் தான் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் பெற்ற மாணவர்களால் வங்கிக் கடனை கட்ட இயலவில்லை. இந்த நிலையில்தான் இந்திய ஸ்டேட் வங்கி, தனது பங்கான 847 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. அதாவது மொத்த தொகையில் 40 சதவிகிதம் செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரனைப் போல மாணவர்களை நெருக்குகிறார்கள். மாணவர்களில் சிலர் வேறு வழியின்றி தற்கொலையை நாடுகிறார்கள். கல்விக் கடனை அடைப்பதாக தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்த அ.தி.மு.க. அரசு உடனடியாக இந்த மாணவர் களின் கல்விக் கடன்களுக்கு தாங்களே பொறுப் பேற்றுக் கொண்டு, வங்கிகளில் மாணவர்கள் வாங்கியுள்ள கடன்களை அடைக்க முன் வரவேண்டும்.

வக்கீல்கள் விவகாரம்
கேள்வி: வழக்கறிஞர் பிரச்சினை மோசமாகிக் கொண்டே போகிறதே?
பதில்: இரு தரப்பினரும் ஒரே துறையில் உள்ளவர்கள். நல்ல கற்றறிவாளர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள பிரதிநிதிகள் ஒற்றுமையாக அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவு காண்பதுதான் நல்லது. ஆனால் இந்தப் பிரச்சினை முடியக் கூடாது என்று அரசுத் தரப்பிலே இருப்பவர்கள் நினைப்பதைப் போலத் தோன்றுகிறது!

அன்புநாதன்
கேள்வி: தேர்தலுக்கு முன்பு கரூருக்கு அருகில் அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய அன்புநாதன் என்பவர் வீட்டைச் சோதனை செய்து பணம், கேமரா, பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய தாக பெரிய அளவில் செய்தி வந்ததே என்ன வாயிற்று?
பதில்: உங்கள் கேள்வியிலேயே அன்புநாதன் அமைச்சருக்கு வேண்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே; பிறகு என்ன? வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்!

அரசு ஊழியர் வீடுகள்
கேள்வி: அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட 700 வீடுகளை ஐந்து மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் திறந்து வைத்தும், யாருக்கும் ஒதுக்கீடு செய்யாமல் தாமதம் செய்கிறார்களாமே?
பதில்: முக்கியப் பிரமுகரின் உதவியாளரிடம் வீடு ஒன்றுக்கு 5000 ரூபாய் கொடுத்தால் உடனடியாக வீடு ஒதுக்கீடு தரப்படும் என்றும் அதே செய்தியில் பின்குறிப்பு தந்திருக்கிறார்களே!

மேட்டூர் அணை
கேள்வி: விவசாயிகள் மகிழ்ச்சியோடு ஆடிப் பெருக்கினைக் கொண்டாட, மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து விட்டதாக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கிறதே?
பதில்: மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் செல்லும் வழித் தடங்களில் புதர்கள், செடிகள், கொடிகள் மண்டிக் கிடப்பதாகவும், அதனால் தண்ணீர் ஆடிப் பெருக்கு விழாவிற்குள் கடைமடைப் பகுதிகளுக்குப் போய்ச் சேருமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே காவிரி நீர் வழித் தடங்களில் உள்ள அடைப்புகளை நீக்க அரசு உதவிட வேண்டு மென்றும் விவசாயிகள் கோரியிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு
கேள்வி: "சென்னையில் தொடர்கிறது வழிப்பறி, திருட்டு, வீடு உடைப்பு" என்ற தலைப்பில் "தினமலர்" நாளேடு நேற்று "கொட்டை எழுத்துக்களில்" செய்தி வெளியிட்டுள்ளது எதைக் காட்டுகிறது?
பதில்: அ.தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாப்பதில் காட்டுகின்ற இலட்ச ணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. "தினமலர்" நாளேடு மட்டுமா இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளது? அநேகமாக ஆங்கில நாளேடுகள், வார இதழ்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் துறை வேறு அமைச்சரின் பொறுப்பிலே இருந்திருந்தால் இந்நேரம் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். ஆனால் முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை அல்லவா அது; யாரைப் பழி வாங்க முடியும்

காவிரி வழக்கு
கேள்வி: காவிரி நீர்ப் பிரச்சினை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறதே?
பதில்: என்ன செய்வது? காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறி ஞரின் வாதத்தை ஏற்று காவிரி வழக்குகளை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வில்லை என்ற செய்தி ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் வழக்கு நடைபெற்ற போது ஆஜராகாதது பற்றி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். காவிரி வழக்கு தொடர்ந்து காலம் கடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகாதது ஏன் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. தமிழக அரசு இதற்கு உரிய விளக்கம் தருமா?












Click it and Unblock the Notifications