'கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊக்கம்...'- பிரதமர் மோடிக்கு கருணாநிதி பாராட்டு!
சென்னை: முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, மாநில சுயாட்சி கொள்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மாநிலங்களிடையேயான மன்றத்தின் கூட்டம் சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டெல்லியில் நடந்து முடிந்துள்ளது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை குறித்து வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, "மத்திய-மாநில அரசுகள் உளவுத் தகவல்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளாமல் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்திட முடியாது.
இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்றெல்லாம் பேசியிருப்பது, திமுக பல ஆண்டுகாலமாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
1970-ஆம் ஆண்டுகளில் திமுக எடுத்து வைத்த மாநில சுயாட்சிக் கொள்கைகள், தற்போது தில்லியிலே நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில் பிரதமரால் பேசப்பட்டு, பல மாநில முதல்வர்களும் அதே கருத்துகளை எடுத்து வைக்கும் அளவுக்கு, மாறி விட்டது.
இந்த நிலைமைகளைப் பார்க்கும்போது, அண்ணாவின் வழியில் தொடக்கத்திலிருந்து மாநில சுயாட்சி கொள்கைக்காகக் குரல் கொடுத்துவரும் நமக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது," என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications