ஜெயலலிதா ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா? கருணாநிதி கேள்வி
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னுடைய சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழாவுக்கு மட்டும் நேரடியாகச் செல்லக் காரணம் என்ன? இவர் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் முதல்வரா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி:- பல்வேறு புதிய தொழில்கள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன என்று ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 193 கோடியே 26 லட்சம் ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 180 கோடியே 41 லட்ச ரூபாய்க்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தும் உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?
கருணாநிதி:- பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறும் ஜெயலலிதா, எந்தெந்தத் தொழில்கள் என்ற பட்டியலை தமிழக மக்கள் அறிந்து கொள்வதற்காகத் தருவாரா?
100 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்து நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் 2 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்குக் கையெழுத்திட்டுள்ளதாகச் சொன்னாரே, அதில் எத்தனை இலட்சம் ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்ற சாதனைப்(!) பட்டியலைத் தமிழகத்துக்கு வழங்கிட முன்வருவாரா?
பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் அவசரம் அவசரமாக 193 கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாகச் சொல்லியிருக்கிறாரே, அந்தத் திட்டங்கள் எல்லாம் எப்போது தொடங்கி, எப்போது முடிக்கப்படும் என்று சொல்வாரா? அன்றாடம் பல கோடி ரூபாய்க்கான திட்டங்களை எல்லாம் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்களே, அதற்காக முழுப் பக்க விளம்பரங்களை ஏடுகளுக்குக் கொடுத்தார்களே, உண்மையில் அந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று விட்டனவா?
இன்னும் முடிவுறாமல், பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தொடக்க விழாக்களை நடத்திக் கொண்டார்களா? இல்லை, இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே பணி முடிவுற்ற திட்டங்கள் என்றால், இத்தனை நாட்களாக இந்தத் திட்டங்களையெல்லாம் தொடங்கி வைக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?
மற்ற தொகுதிகளுக்கான திட்டங்களையெல்லாம் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னுடைய சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழாவுக்கு மட்டும் நேரடியாகச் செல்லக் காரணம் என்ன?
இவர் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் முதல்வரா? தன்னுடைய தொகுதி, மற்றவர்கள் தொகுதி, ஆளுங்கட்சித் தொகுதி, எதிர்க்கட்சிகளின் தொகுதி என்ற பாகுபாடுகளையெல்லாம் கடந்து நடந்து கொள்ள வேண்டியவர் அல்லவா முதலமைச்சர்? அந்த இலக்கணத்தையெல்லாம் ஜெயலலிதா புறக்கணித்து விட்டாரே? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.