கருணாநிதி வைரவிழா - ராகுல், சீதாராய் யெச்சூரி, நிதிஷ்குமார் சென்னை வந்தடைந்தனர்
கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் பங்கேற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.
சென்னை: கருணாநிதி வைர விழாவில் பங்கேற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். திமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் சென்னை வருகை தந்துள்ளார். வைரவிழாவில் பங்கேற்க வரும் தலைவர்களுக்கு ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்து வரவேற்பு அளிக்கிறார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது
இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

கருணாநிதி வைரவிழா
இன்று காலை முதலே தலைவர்கள் சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். வைரவிழாவில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் விருந்து அளித்து வரவேற்பு அளிக்கிறார். சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, நாராயணசாமி, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

ராகுல்காந்தி வருகை
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிற்பகலில் சென்னை வந்தார். அவரை திமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்.

உற்சாக வரவேற்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய வாயிலில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

நிதிஷ்குமார் வருகை
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

தேநீர் விருந்து
இன்று மாலை மு.க.ஸ்டாலின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார். தேநீர் விருந்து முடிந்ததும், மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications