பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்தும் ஆந்திரா.... தடுக்காத தமிழக அரசு- சாடும் கருணாநிதி
சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் அனுமதி இல்லாமல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணைகளையோ, தடுப்பணைகளையோ கட்டக்கூடாது. இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு, குப்பம் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு அணை கட்டும் முயற்சியில் இறங்கியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையிலே உள்ளது. பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தையும் ஆந்திர அரசு நிறுத்தி வைத்தது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டக்கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.

ஒப்புதல் வழங்கியதா தமிழகம்?
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், கர்நாடக அரசும் ஏற்கனவே ஏராளமான தடுப்பணைகளைக் கட்டிவிட்டதால் பாலாறு அருகிப் போய் விட்ட நிலையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில், புல்லூர் என்ற இடத்தில், தமிழக எல்லையில் ஐந்து அடி உயர தடுப்பணையை ஆந்திர மாநில அரசு கட்டியுள்ளது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதா என்றும் தெரியவில்லை.

10 அடியாக உயர்த்தும் பனி
தற்போது அந்தத் தடுப்பணையின் உயரத்தை 10 அடியாக உயர்த்தும் பணி, 45 இலட்சம் ரூபாய்ச் செலவில் துவக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

2,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்
தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால், தமிழகத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் பாதிக்கப்படும். மேலும் இவ்வாறு தடுப்பணை கட்டப்படுவதால், இந்து சமய அறநிலையக் கட்டுப்பாட்டின் கீழ், பாலாற்றின் கரையிலே உள்ள கனகநாச்சியம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை கவனிக்காமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தியினை இன்று வெளியிட்டுள்ள ஆங்கில நாளேடு இது தமிழ்நாடு அரசாங்கத்தின் தோல்வி என்று வேலூர் விவசாயிகள் குற்றஞ்சாட்டுவதோடு, தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால் சிறிய அளவில் வந்து கொண்டிருந்த தண்ணீரும் தடைப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.

விவசாயிகள் பிரச்சனையிலுமா?
இரண்டு மாதங்களாக தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், தமிழகப் பொதுப் பணித்துறையின் அதிகாரிகளோ அல்லது தமிழக அரசின் பொது நிர்வாக அதிகாரிகளோ, யாரும் அந்தப் புல்லூருக்கு வந்து ஆந்திர மாநில அரசு மேற்கொண்டிருக்கும் அத்துமீறலைப் பார்த்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசின் அதிகாரி ஒருவரே கூறியதாகவும் எழுதியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு மீறல்கள் குறித்துத்தான் அ.தி.மு.க. அரசு அக்கறையற்ற தன்மையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றால், விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் இதுபோன்ற பிரச்சினையிலும் கவலையற்ற போக்கிலே தான் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications