11-ஆவது முறையாக தி.மு.க. தலைவராகிறார் கருணாநிதி! மீண்டும் பொருளாளராக மு.க.ஸ்டாலின்!
சென்னை: தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-ஆவது முறையாகவும், பொதுச்செயலாளராக க.அன்பழகன் 10-ஆவது முறையாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தி.மு.க. பொருளாளராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்தல் ஜனவரி 9-ந் தேதி தி.மு.க. பொதுக் குழுவில் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தப்பட்டது.
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்து மனுதாக்கல் செய்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோரும் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் பெயரில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் மேளதாளத்துடன் வந்து தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி பெயரிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரிலும் அறிவாலயத்தில் மனுதாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தரும் இதே போல் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் பெயரில் மனு செய்தார். அவருடன் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.
திருச்சி கே.என்.நேரு, கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என 60 மாவட்டச் செயலாளர்களும், கருணாநிதி, க.அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் தற்போது வகித்து வரும் பொறுப்புகளுக்கு மீண்டும் போட்டியிடக் கோரி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மாவட்டச் செயலாளர்கள் மேளதாள முழக்கத்துடன் வேட்டுகளை வெடித்தும் ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல் செய்ததால் அண்ணா அறிவாலயேமே நேற்று விழாக்கோலமாக காட்சி அளித்தது.

அறிவாலயத்தை விட்டு ஸ்டாலின் கிளம்பிய போது அவரது காரை மறித்தும் சில மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து வாங்கி வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மூவருக்கும் எதிராக வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பொதுக்குழுவில் அனைவரும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-ஆவது முறையும், பொதுச்செயலாளராக க.அன்பழகன் 10-ஆம் முறையும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மேற்கு மாவட்டத் தி.மு.க. சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications