ஒரு கட்சியில் இருந்து பிரிந்து சென்று மற்றொரு கட்சியில் சேருவது நாகரீகமற்ற செயல் அல்ல - கருணாநிதி
சென்னை: ஒரு கட்சியிலிருந்து விலகி வருபவர்களை, மற்றொரு கட்சியிலே இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல! வைகோ உள்ளிட்ட அனைவருமே திமுகவிலிருந்து பிரிந்து சென்று இணைந்து கொண்டதுதானே ம.தி.மு.க.! அது மட்டும்தான் நனி நாகரிகமா? என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கேள்வி: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "இந்து" ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது, இன்றைக்கு மக்கள் மத்தியில் தி.மு.க. செல்வாக்கு இழந்து வருகிறது" என்று கூறியிருக்கிறாரே?
ஒரு கட்சியிலிருந்து விலகி வருபவர்களை, மற்றொரு கட்சியிலே இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல! வைகோ உள்ளிட்ட அனைவருமே திமுகவிலிருந்து பிரிந்து சென்று இணைந்து கொண்டதுதானே ம.தி.மு.க.! அது மட்டும்தான் நனி நாகரிகமா?
"வைகோ"வைப் பொறுத்தவரையில் அவரை நான் நன்கறிவேன். நல்ல பேச்சாளர், ஆனால் நாட்டிலே என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கட்சியிலிருந்து வரிசையாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் விலகி, தி.மு.கழகத்திலே தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் வைகோ அவருடைய கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும், தி.மு.க. செல்வாக்கை இழந்து வருவதாகவும் கூறுகிறார் என்றால் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? அதுமாத்திரமல்ல; அவருடைய கட்சியினரை கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தான் ஏதோ வலியுறுத்தி அழைத்து வருவதைப் போலவும், எனக்குத் தெரியாமல் அந்தச் சம்பவங்கள் நடைபெறுவதைப் போலவும் வைகோ பேட்டியில் கூறியிருக்கிறார். அதுவும் தவறான எண்ணம்.
எனக்குத் தெரியாமல், தி.மு.கழகத்தில், இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை என்பதை அனுபவத்தின் அடிப்படையில் வைகோ அறிவார். அரசியலில் நாகரிகம் இல்லாமல், ம.தி.மு.க. நண்பர்களை கழகத்தில் தி.மு.கழகத் தலைமை இணைத்துக் கொள்வதாகவும் வைகோ பேட்டியளித்திருக்கிறார்.
கேள்வி: "தனக்கென்று யாருமே இல்லை, எல்லாமே நீங்க தான்" என்று முதல் அமைச்சர் "வாட்ஸ்-அப்" உரையில் சொல்லியிருக்கிறாரே?
இந்தக் கருத்துக்கு, "பேஸ்-புக்"கில் ஜெயலலிதாவுக்கு ஒருவர் அளித்த பதில் என்ன தெரியுமா? "நீங்களும் கொஞ்ச நாளா சொல்றீங்க! நாங்க இன்னும் உங்கள நம்பலன்னா அது ஆண்டவனுக்கே அடுக்காது. 600 ஏக்கர் கொடநாடு தோட்டம், சிறுதாவூர் பங்களா, ஐதராபாத் திராட்சைத் தோட்டம், போயஸ் தோட்டம், உங்க நகை நட்டுகள், ஜாஸ் நிறுவனம் வாங்கிய தியேட்டர்கள் உட்பட அனைத்தும் உங்களுக்குப் பிறகு எங்களுக்குச் சொந்தம் என உயில் எழுதி தந்திருங்களேன்!" என்பதுதான் அந்தப் பதில்!
பெரு வெள்ளம் ஏற்பட்டது குறித்து, தலைமைச் செயலாளரின் அறிக்கையில், அரசிடமோ, அதிகாரிகளிடமோ எந்தத் தவறும் இல்லை என்று கூறியிருக்கிறாரே?
அரசிடமோ, அதிகாரிகளிடமோ எந்தத் தவறும் இல்லை என்றால், பொதுப்பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் திருமாறனையும், நீர்வள ஆதாரத் துறையின் தலைமைப் பொறியாளர் சண்முகத்தையும் "சஸ்பென்ட்" செய்தது எதற்காக? வானிலை மையம் எச்சரிக்கையே செய்யவில்லை என்று கூறும் தலைமைச் செயலாளர், மக்களுக்கு அறிவிப்பு கொடுத்து பலரையும் வெளியேற்றினோம் என்கிறார். வானிலை மையம் எச்சரிக்கை செய்யாத போது, எந்த அடிப்படையில் இவர் மக்களுக்கு அறிவிப்பு கொடுத்து வெளியேற்றினார் என்ற "நக்கீரன்" கேள்விக்கு அரசினரின் பதில் என்ன?
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.