ஜெகத்ரட்சகனை வீட்டில் சிறைக் கைதி போல அடைத்து வைத்தது முறைதானா? கருணாநிதி
சென்னை: வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் மூன்று நாட்களாக திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனை இல்லத்தில் சிறைக் கைதி போல் அடைத்து வைத்திருப்பது முறைதானா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெகத்ரட்சகன் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக் கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக் கைதி போல வீட்டி லேயே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை.

ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரிகளை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும் (illegal Detention).வருமான வரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல், ஜெகத்ரட்சகனை கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதி போல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும், யாரிடமாவது இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016 க்குள் வருமான வரி செலுத்தி நேர் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போது ஜெகத்ரட்சகனின் வீட்டில் மேற்கொள்ளப்படும் வருமான வரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications